4421. | கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த நீடு வெஞ் சினத்து அரிஇனம் இரு புடை நெருங்க, மூடும் உம்பரும், இம்பரும், பூமியில் மூழ்க, - தோடு இவர்ந்த தார்க்கிரி புரை துமிந்தனும் - தொடர்ந்தான். |
தோடு இவர்ந்த தார்க்கிரி புரை - இதழ்கள் அமைந்த மலர் மாலையை அணிந்தவனும் மலையை ஒத்தவனுமான; துமிந்தன் - துமிந்தன் என்னும் வீரனும்; கோடி கோடி நூறு ஆயிரம் எண் எனக் குவிந்த - பல கோடி இலட்சக் கணக்காக நிறைந்த; நீடு வெஞ்சினத்து அரி இனம் - மிகக் கொடிய கோபத்தையுடைய வானரக் கூட்டம்; இரு புடை நெருங்க - இரு பக்கங்களிலும் நெருங்கி வரவும்; மூடும் உம்பரும் - பூமியின்மேல் கவிந்த ஆகாயமும்; இம்பரும் பூமியில் மூழ்க - இவ் வுலகமும் (அச்சேனைகள் வரும் போது எழும்) புழுதியில் மறைந்து விடவும்; தொடர்ந்தான் - பின் வந்தான். வீடணன் இராமனிடம் சரண்புக வருகையில் அவனை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள் இவ்விருவருமேயாவர். 15 |