4424. | ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் தாழும் காலத்தும், தாழ்வு இலாத் தட வரைக் குலங்கள் சூழும் தோற்றத்த, வலி கொள் தொள்ளாயிரக்கோடிப் பாழி வெம் புயத்து அரியொடும், - இடபனும் - படர்ந்தான். * |
இடபனும் - இடபன் என்னும் வீரனும்; ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற - பதினான்கு என்று சொல்லப்பட்ட; உலகங்கள் எவையும் - எல்லா உலகங்களும்; தாழும் காலத்தும் - அழிகின்ற ஊழிக் காலத்திலும்; தாழ்வு இலா - அழிவில்லாத; தடவரைக் குலங்கள்- பெரிய மலைகளின் தொகுதிகள்; சூழும் தோற்றத்த - சூழ்ந்திருப்பது போன்ற தோற்றமுடையனவான; வலி கொள் - வலிமையைக் கொண்டுள்ள; பாழி வெம் புயத்து - வன்மை மிக்க கொடிய தோள்களோடு கூடிய; தொள்ளாயிரம் கோடி அரியொடும் - தொள்ளாயிரங் கோடி என்று கணக்கிட்ட வானர சேனையோடும்; படர்ந்தான் - வந்து சேர்ந்தான். உலகம் யாவும் அழியும் பிரளய காலத்திலும் அழியாது நிற்கும் மலைகள் இருப்பின், அம் மலைகளே இந்த வானர சேனைக்கு ஒப்பாகும் என்பது - இல் பொருளுவமையணி. 18 |