4424. ஏழும் ஏழும் என்று
      உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும், தாழ்வு இலாத்
      தட வரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலி
      கொள் தொள்ளாயிரக்கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும், -
      இடபனும் - படர்ந்தான்.   *

     இடபனும் - இடபன் என்னும் வீரனும்; ஏழும் ஏழும் என்று
உரைக்கின்ற -
பதினான்கு என்று சொல்லப்பட்ட; உலகங்கள் எவையும் -
எல்லா உலகங்களும்; தாழும் காலத்தும் - அழிகின்ற ஊழிக் காலத்திலும்;
தாழ்வு இலா -
அழிவில்லாத; தடவரைக் குலங்கள்- பெரிய மலைகளின்
தொகுதிகள்; சூழும் தோற்றத்த - சூழ்ந்திருப்பது போன்ற
தோற்றமுடையனவான; வலி கொள் - வலிமையைக் கொண்டுள்ள; பாழி
வெம் புயத்து -
வன்மை மிக்க கொடிய தோள்களோடு கூடிய;
தொள்ளாயிரம் கோடி அரியொடும் -
தொள்ளாயிரங் கோடி என்று
கணக்கிட்ட வானர சேனையோடும்; படர்ந்தான் - வந்து சேர்ந்தான்.

     உலகம் யாவும் அழியும் பிரளய காலத்திலும் அழியாது நிற்கும் மலைகள்
இருப்பின், அம் மலைகளே இந்த வானர சேனைக்கு ஒப்பாகும் என்பது - இல்
பொருளுவமையணி.                                              18