4426. | கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன், மாதிரம் சிறிது என விரிந்த, வையம் சாய்வரத் திரிதரு வானர சேனை ஐ - அஞ்சு ஆயிரகோடி கொண்டு, அனுமன் வந்து அடைந்தான். |
கை அஞ்சு ஆயுதம் உடைய - கிரணங்களாகிய அஞ்சத்தக்க ஆயுதங்களையுடைய; அக் கடவுளைக் கண்டும் - அந்தச் சூரியனைக் கண்டுங்கூட; மெய் அஞ்சாதவன் - சிறிதும் நடுக்கம் கொள்ளாதவனான; அனுனுன் - அனுமன்; மாதிரம் சிறிது என விரிந்த - திக்கெல்லை முழுவதும் அளவில் சிறிய என்று என்னுமாறு பரவியுள்ளதும்; வையம் சாய்வரத் திரிதரு - நிலவுலகம் ஒரு புறமாகச் சாயும்படி உலவுவதுமான; ஐ அஞ்சு ஆயிர கோடி வானர சேனை கொண்டு - இருபத் தையாயிரங்கோடி எண்ணுள்ள வானரப் படையை உடன்கொண்டு; வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான். அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிச் சிறிதும் அஞ்சாது, அதைப் பிடிக்கப் பாய்ந்தவனாதலால அவனை 'அக் கடவுளைக் கண்டு மெய் அஞ்சாதவன்' என்றார். பூமியின் எந்தப் பகுதியில் இவ் வானர சேனை செல்லுகின்றதோ அந்தப் பகுதி மிக்க பாரத்தால் சாய்வதாயற்று என்பது. சாய்வர; திரிதரு: வர, தரு என்பன துணை வினைகள். 20 |