4427. | நொய்தின் கூடிய சேனை, நூறாயிரகோடி எய்த, தேவரும், 'என்கொலோ முடிவு?' என்பது எண்ண, மையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்க, - தெய்வத் தச்சன் மெய்த் திரு நெடுங்காதலன் - சேர்ந்தான். |
தெய்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் - தேவ சிற்பியாகிய விசுவகர்மாவின் பிரதியுருவே எனத்தக்க அழகிய உயர்நத் மகனாகிய நளன் என்பவன்; தேவரும் - தேவர்களும்; என்கொலோ முடிவு - இப் படையின் எல்லையாதோ; என்பது எண்ண - என்று கருதும்படியாக; அந்தகன் மையல் சிந்தையால் - யமனும் இதைக் கண்டதனாலாகிய மயக்கம் கொண்ட மனத்தால்; மயக்குற்று மயங்க - கலங்கித் திகைக்கவும்; நொய்தின் கூடிய - விரைவில் திரண்ட; நூறாயிர கோடி சேனை எய்த - இலட்சக் கோடிக் கணக்கான வானர சேனை தன்னோடு வர; சேர்ந்தான் - வந்தடைந்தான். அந்தகன்: உயிர்களுக்கு அந்தத்தைச் செய்பவனென யமனுக்குக் காரணக் குறி. நளன்: தெய்வத் தச்சனான விசுவகர்மாவின் மகனாய்ப் பிறந்த ஒரு வானர வீரன்; தன் கையால நீரில் எதைப் போட்டாலும் மிதக்கும்படி வரம் பெற்றவன். திரு நெடு என்றதனால் உடல்வனப்பும் உயரமும் குறிக்கப் பெற்றன. 21 |