சுக்கிரீவன் இராமனுக்குத் தானையை வரன்முறைப்படி காட்டுதல் 4437. | மீண்டு, இராமனை அடைந்து, 'இகல் வீரருள் வீர! காண்டி, நீ' என்று, வரன்முறை தெரிவுறக் காட்டி, ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே, ஈண்டு சேனை, பால் எறி கடல் நெறி படர்ந்தென்ன. * |
(சுக்கிரீவன்)மீண்டு இராமனை அடைந்து - திரும்பவும் இராமனிடம் வந்து (அவனை நோக்கி); 'இகல் வீரருள் வீர - வலிமை பொருந்திய வீரர்களுள்ளே சிறந்த வீரனே!நீ காண்டி என்று - நீ காண்பாய் என்று; வரன் முறை தெரிவுறக் காட்டி - சேனைகளை முறையாகத் தெரியும்படி (அவனுக்குக்) காண்பித்து; ஆண்டு இருந்தனன் - அந்த இடத்தில் இருந்தான் (அப்போது); ஈண்டு சேனை - திரண்ட அந்த வானர சேனையானது; எறி பாற் கடல் - அலை வீசுகின்ற பாற்கடல்; நெறி படர்ந்து என்ன - வழியில் சென்றது போல; ஆர்த்து உருத்து எழுந்தது - பேராரவாரம் செய்து (பிறர்க்கு) அச்சம் உண்டாகப் புறப்பட்டது. சுக்கிரீவன் வானரப் படைகளன் வரலாறுகளை இராமனுக்குச் செம்மையாக விளங்கச் சொன்னான் என்பது. வானரப் படைக்குப் பாற்கடல் உவமை: நிறத்தாலும் ஆரவாரத்தாலும் பாற்கடல் அலைகள் வானர சேனைக்கு உவமையாயின. ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் இப்பாடல் இடம் பெறவில்லை. 31 |