4439. அத்தி ஒப்பு எனின்,
      அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம்
      உவமை வேறு யாதோ?
பத்து இரட்டி நன் பகல்
     இரவு ஒருவலர் பார்ப்பர்,
எத் திறத்தினூம் நடுவு
      கண்டிலர், முடிவு எவனோ?

     அத்தி ஒப்பு எனின் - (இச் சேனைத் தொகுதிக்கு) கடல் நிகராகு
மென்று கூறினால்; அன்னவை உணர்ந்தவர் உளர் - அக் கடல்களின்
அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள் (இச் சேனையின் பரப் பைக்
கண்டவர்கள் இல்லை); இனி வித்தகர்க்கு - இனிமேல் அறிவு டையவரால்;
உரைக்கல் ஆம் உவமை -
(இச் சேனைக்கு) எடுத்துக் கூறும் உவமை;
வேறு யாதோ -
வேறு யாது உள்ளது (எதுவுமில்லை); பத்து இரட்டி
நன்பகல் இரவு -
இருபது நாட்கள் பகலிலும் இரவிலும்; ஒருவலர்
பார்ப்பார்-
இடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர்; எத்
திறத்தினும் -
எவ்வகையாலும்; நடுவு கண்டிலர் - (இச் சேனையின்)
நடுவையும்காணாதவராயினர்; முடிவு எவனோ - (அவ்வாறானால்) இதன்
முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ?

     அறிவாளிகளான இராமஇலக்குவர் இருபது நாள் அல்லும் பகலும் இடை
விடாமல் பார்த்து இச் சேனையின் நடுவெல்லைக் கூடக் காணாதவராயினர்.
அப்படியிருக்க, இனி இதன் முடிவெல்லையை யாரால் காண முடியும்
என்றவாறு. அத்தி - கடல்.                                      33