4439. | அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்; வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ? பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பர், எத் திறத்தினூம் நடுவு கண்டிலர், முடிவு எவனோ? |
அத்தி ஒப்பு எனின் - (இச் சேனைத் தொகுதிக்கு) கடல் நிகராகு மென்று கூறினால்; அன்னவை உணர்ந்தவர் உளர் - அக் கடல்களின் அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள் (இச் சேனையின் பரப் பைக் கண்டவர்கள் இல்லை); இனி வித்தகர்க்கு - இனிமேல் அறிவு டையவரால்; உரைக்கல் ஆம் உவமை - (இச் சேனைக்கு) எடுத்துக் கூறும் உவமை; வேறு யாதோ - வேறு யாது உள்ளது (எதுவுமில்லை); பத்து இரட்டி நன்பகல் இரவு - இருபது நாட்கள் பகலிலும் இரவிலும்; ஒருவலர் பார்ப்பார்- இடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர்; எத் திறத்தினும் - எவ்வகையாலும்; நடுவு கண்டிலர் - (இச் சேனையின்) நடுவையும்காணாதவராயினர்; முடிவு எவனோ - (அவ்வாறானால்) இதன் முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ? அறிவாளிகளான இராமஇலக்குவர் இருபது நாள் அல்லும் பகலும் இடை விடாமல் பார்த்து இச் சேனையின் நடுவெல்லைக் கூடக் காணாதவராயினர். அப்படியிருக்க, இனி இதன் முடிவெல்லையை யாரால் காண முடியும் என்றவாறு. அத்தி - கடல். 33 |