4441. | 'அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு, நாமும் நம் அறிவால் உடல் கண்டோம்: இனி முடிவு உள காணுமாறு உளதோ? - மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! - மண்ணிடை மாக்கள், ''கடல் கண்டோம்'' என்பர்; யாவரே முடிவு உறக் கண்டார்? |
மடல்கொண்டு ஓங்கிய அலங்கலாய் - இதழ்கள் நிறைந்து சிறந்த மாலையை அணிந்தவனே!நாமும் நம் அறிவால் - நாம் இருவரும் நமது அறிவு கொண்டு; அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு - வலிமை பெற்றுச் சிறந்துள்ள இந்த வானரப் படையின்; உடல் கண்டோம் - நடுவிடத்தை ஓரளவு பார்த்தோம் (அல்லாமல்); இனி உள - இனி இதற்குள்ள; முடிவு காணுமாறு உளதோ - முடிவெல்லையைக் காணும் வகை ஏதேனும் உண்டோ?மண் இடை - இந் நிலவுலகத்தில்; மாக்கள் - மனிதர்கள்; கடல் கண்டோம் என்பர் - கடலைப் பார்த்தோம் என்று சொல்வார்கள் (ஆனால்); முடிவு உறக் கண்டார் யாவரே - அக்கடலின் முடிவெல்லையைக் கண்டறிந்தவர் யார்தாம்? கடலைக் காண்பவர் அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பாரேயல்லாமல் அதன் முடிவெல்லையைக் காணமாட்டார்கள்; அதைப்போல நாமும் இச்சேனைக் கடலின் ஒரு பகுதியை மட்டும் கண்டோமேயல்லாமல் இதன் முடிவெல்லையைக் காணமுடியாதுஎன்பது. சேனைக்கு: உருபு மயக்கம். 35 |