4443.'இன்ன சேனையை, முடிவுற
      இருந்து இவண் நோக்கி,
பின்னை காரியம் புரிதுமேல்,
     நாள் பல பெயரும்;
உன்னி, செய்கைமேல் ஒருப்படல்
      உறுவதே உறுதி'
என்ன - வீரனைக் கைதொழுது,
      இளையவன் இயம்பும்:

     இன்ன சேனையை - இத்தகைய படையை; இவண் இருந்து முடி வுற
நோக்கி -
இங்கேயிருந்து முழுவதும் நன்றாகப் பார்த்து; பின்னை - அதன்
பின்பு; காரியம் புரிதுமேல் - (நமது) செயலைச் செய்யத்
தொடங்குவோமானால் (இதைப் பார்த்து முடிவதற்குள்); நாள் பல பெயரும் -
பல நாட்கள் கழிந்து விடும்; உன்னி - (ஆகவே இனிச் செய்ய
வேண்டியவற்றை) நன்றாக ஆராய்ந்து; செய்கைமேல் ஒருப்படல் உறுவதே
உறுதி -
செய்யவேண்டிய செயலில் மனம் ஒன்று பட்டுச் செய்ய முற்படுவதே
நன்மை தருவதாகும்; என்ன - என்று (இராமன் கூற); இளையவன் -
இலக்குவன்; வீரனைக் கை தொழுது இயம்பும் - இராமனை வணங்கிக்
கூறலானான்.

     தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால்
(7382) என்றும் கும்பகருணனின் உருவத் தோற்றம் வருணிக்கப்பட்டதை இங்கு
ஒப்பிட்டுணரலாம்.                                              37