4444. | 'யாவது எவ் உலகத்தினின், இங்கு, இவர்க்கு இயற்றல்- ஆவது ஆகுவது; அரியது ஒன்று உளது எனல் ஆமே? - தேவ! - தேவியைத் தேடுவது என்பது சிறிதால்; பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப்படையால். |
தேவ - தேவனே!இங்கு இவர்க்கு - இங்குள்ள வானர வீரர்களுக்கு; எவ் உலகத்தினின் - எந்த உலகத்தில்; யாவது இயற்றல் ஆவது - எதைச் செய்து முடிக்கவேண்டியதிருந்தாலும்; ஆகுவது ஆவது - அச்செயல்கள் எளிதில் கைகூடிவிடும்; அரியது ஒன்று - (அவ்வாறாக இவர்களுக்குச் செய்வதற்கு) அரிய செயல்; உளது எனல் ஆமே - உள்ளது என்று சொல்வதற்கு இடமுண்டோ? தேவியைத் தேடுவது என்பது - சீதையைத் தேடிக் கண்டு பிடிப்பதென்பது; சிறிது - (இவர் களது பேராற்றலுக்கு) மிகவும் எளிதான செயலாகும்; இப்படையால் - இந்தச் சேனையால்; பாவம் தோற்றது- பாவம் தோல்வியடைந்தது; தருமமே வென்றது - தருமமே வெற்றிபெற்றது. எந்த உலகத்தில் எச் செயல் செய்யவேண்டுமானாலும் இவர்களுக்கு எளிதில் செய்ய முடியுமென்பது. நல்லறத்தின் வழி நிற்கும் நமக்கு இச் சேனை கிடைத்தது பாவம் அழிவதற்கும் தருமம் தழைப்பதற்கும் ஓர் அறிகுறி என்றான் இலக்குவன். 38 |