படையின் அளவு பற்றி இராமனும் சுக்கிரீவனும் உரையாடல் கலிவிருத்தம் 4447. | 'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் இன்றி, நிரைந்து பரந்து எழும் தகைவு இல் சேனைக்கு, அலகு சமைந்தது ஓர் தொகையும் உண்டுகொலோ?' எனச் சொல்லினன். |
'வகையும் - ஆராய்தலும்; மானமும் - ஒப்புமையும்; மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் - எதிர்த்துச் செயல்படக்கூடிய பகைவரும் இன்றி - இல்லாமல்; நிரைந்து - வரிசையாக அமைந்து; பரந்து எழும் - விரிவாகப் பரவி எழுந்துள்ளதும்; தகைவு இல் சேனைக்கு - தடுப்பதற்கு எவரும் இல்லாததுமான சேனைக்கு; அலகு சமைந்தது ஓர் தொகையும் உண்டுகொலோ - அளவு கொண்டு சொல்லக்கூடிய ஓர் எண்ணிக்கையும் உண்டோ'; என - என்று இராமன் வினவ; சொல்லினன் - சுக்கிரீவன் பின்வருமாறு சொன்னான். தலைவன் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுதலன்றி வேறு ஆய்வு மேற் கொள்ளுதல் படைவீரர்களுக்கு இல்லை என்ற கருத்தினை 'வகை. . . இன்றி' என்ற தொடர்பு புலப்படுத்திற்று. வகையும் மானமும் பகையும் இன்றி எனக் கூட்டிப் பொருள் கொள்க. வகைதல் - ஆராய்தல். 'நகர் நீ தவிர்வாய்' எனவும் வகையாது தொடர்ந்து' என்ற தொடரில் 'வகையாது' என்ற சொல் 'ஆராயாமல்' என்ற பொருளில் வந்தது. மானம் - ஒப்புமை. வகையும் மானமும் பகையும் என்ற எண் ணும்மைச் சொற்கள் 'இன்றி' என்னும் வினையெச்சம் கொண்டு முடிவதாகப் பாடல் அமைந்துள்ளதுகாண்க. 1 |