4449. | 'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன் கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும் நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான். |
அனீகருக்கு - இச் சேனையிலுள்ள வானரங்களுக்கு; ஏறு கொற்றத் தலைவர் - சிறந்த வெற்றியையுடைய தலைவர்கள்; ஆறு பத்து எழு கோடி- அறுபத்தேழு கோடிக் கணக்கான; இவர்க்கு முன் கூறு சேனைப்பதி - இப் படைத் தலைவர்களுக்கும் முதலாகச் சொல்லப்பட்ட தலைமைப் படைத்தலைவனானவன்; கொடுங் கூற்றையும் - கொடிய யமனையும்; நீறுசெய்திடும் நீலன் - சாம்பலாக்கவல்ல வலிமையுள்ள நீலனாவன்; என்று ஓதினான் - என்று சுக்கிரீவன் கூறினான். எழுபது வெள்ளம் வானர வீரர்களுக்கு அறுபத்தேழு கோடி சேனைத் தலைவர் உள்ளனர்; அந்தப் படைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் நீலன் என்பது. கொல்லுதல் தொழிலமைந்த யமனையே கொல்லும் திறம் வாய்ந்த வானென நீலனது சிறப்பு கூறப்பெற்றுள்ளது. அனீகம் - சேனை வகுப்பு; அனீகர் - சேனையிலுள்ளவர். 3 |