ஒரு திங்களுக்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல் 4457. | வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும் சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை; கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான். |
(சுக்கிரீவன் இடபன் முதலான வானர வீரர்களை நோக்கிக்); கொற்ற வாகையினீர் - வெற்றிக்கான வாகைமாலையை அணிவதற்கு உரியவர்களே! வெற்றி வானரம் வெள்ளம் இரண்டொடும் - (நீங்கள்) வெற்றி பெறும் தன்மையுள்ள இரண்டு வெள்ளம் வானர சேனையோடும்; சுற்றி ஓடித்துருவி - (பல இடங்களில்) அலைந்து திரிந்து (சீதையைத்) தேடி; ஒரு மதி முற்றுறாதமுன் - ஒரு திங்கள் கழிவதற்குள்ளே; இவ் இடை முற்றுதிர் - இங்கே திரும்பி வந்து சேருங்கள்; எனக் கூறினான் - எனச் சொல்லினான். நீங்கள் தனித் தனியே இரண்டு வெள்ளம் வானரப் படையோடு நான் உங்களுக்குக் குறித்த திசைகளுக்குச் சென்று சீதையைத் தேடி ஒரு திங்களுக்குள் இங்கு வந்து சேரவேண்டுமென்று சுக்கிரீவன் ஆணையிட்டான் என்பது. வாகை -ஆகுபெயர். 11 |