தென்திசை செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல் 4458. | 'ஈண்டுநின்று எழுந்து, ஈர் - ஐந்து நூறு எழில் தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால், நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ வேண்டும் விந்தமலையினை மேவுவீர். |
(தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன்); ஈண்டு நின்று எழுந்து - (நீங்கள்) இங்கிருந்து புறப்பட்டு; எழில் தூண்டு சோதி - அழகு மிகுந்து ஒளி வீசுகின்ற; ஈர் ஐந்து நூறு கொடு முடி தோன்றலால் - ஆயிரஞ் சிகரங்கள் காணப்படுவதால்; நீண்ட நேமி கொல் ஆம் என - பெரிய வடிவு கொண்ட திருமால்தானோ என்று; நேர் தொழவேண்டும் - எதிரே சென்று தொழுவதற்குரிய; விந்த மலையினை - விந்திய மலையை; மேவுவீர் - முதலிலே சென்று சேருங்கள். ஆயிரங் கொடுமுடிகளையுடைய விந்திய மலைக்கு ஆயிரம் முடிகளையுடைய திருமாலை உவமையாக்கினார். நேமி - ஆகுபெயர். 12 |