4459. | 'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும் ஆடுகின்றது, அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது, பல் மணியால் இருள் ஓடுகின்ற நருமதை உன்னுவீர். |
அவ்வரை தேடித் தீர்ந்தபின் - அந்த விந்திய மலையில் சீதையைத் தேடி முடித்த பின்பு; தேவரும் ஆடுகின்றது - தேவர்களும் வந்து நீராடப் பெறுவதும்; அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - (வெள்ளத்தால் அடித்து வரப் பெற்ற மலர்களிலுள்ள தேனைப் பருகி அந்தக் களிப்பினால்) வண்டுகள் பஞ்சமம் என்ற சுரத்தைப் பாடப் பெறுவதுமான; பல் மணியால் இருள் ஓடுகின்ற - (அங்குள்ள) பலவகையான இரத்தினங்களின் ஒளியால் இருள் விலகுவதற்குக் காரணமான; நருமதை உன்னுவீர் - நருமதையாற்றைச் சென்று அடைவீர். நருமதை நதி: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஓர் ஆறு; தேவர்கள் நீராடும் தெய்வீகமும் வண்டுகள் இசைபாடும் சூழல் இனிமையும், மணியொளியால் இருள் நீங்கும் செல்வ வளமும் அந்த நருமதை நதிக்கு உள்ளதெனக் கற்பனை செய்தமை நயமானது. ஐந்து - பஞ்சமம்: ஏழு சுரங்களுள் இது ஐந்தாவது. அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - சொல்நயம். 13 |