4460.'வாம மேகலை வானவர் மங்கையர்,
காம ஊசல் களி இசைக் கள்ளினால்,
தூம மேனி அசுணம் துயில்வுறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர்.

     (அங்கிருந்து)வாம மேகலை வானவர் மங்கையர் - அழகிய
மேகலையணிந்த தேவ மாதர்கள்; காம ஊசல் - விருப்பத்தோடு ஊஞ்சல்
ஆடும்போது; களி இசைக் கள்ளினால் - மகிழ்ச்சியால் பாடுகின்ற
இசையாகிய மதுவால்; தூம மேனி அசுணம் - புகை போன்ற கரிய
நிறமுடைய அசுணமாப் பறவைகள்; துயில்வுறும் - தூங்குவதற்கு இடமான;
ஏம கூடம் எனும் மலை எய்துவீர் -
ஏமகூடம் என்னும் மலையைப் போய்ச்
சேருங்கள்.

     ஏமகூட மலையில் தேவமாதர்கள் வந்து ஊஞ்சலாடும்போது களிப்பினால்
பாடுகினற இசைப் பாடலால் அசுணப் பறவை தூங்கும் என்பது.  அசுணம் -
இசையுணர்வுடைய பறவை; விலங்கு என்றும் கூறுவர். அரமங்கையர்: மரூஉ.
(அமர மங்கையர்). ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. வாமம் - அழகு.
                                                           14