4477.'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
     முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
      அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
      திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
      நெடு வரையும், கடலும், காண்டிர்.

     தென் தமிழ்நாட்டு - தெற்குத் திசையில் தமிழ்நாடான பாண்டிய
நாட்டிலுள்ள; அகன் பொதியில் - அகன்ற பொதிய மலையிலே நிலை பெற்ற;
திருமுனிவன் -
சிறந்த அகத்திய முனிவனது; தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்
-
தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின் (அம் மலையா னது); என்றும் அவன்
உறைவிடம் ஆம்  -
எப்பொழுதும் அம் முனிவன் வாழ்ந்துவரும் இடமாகும்;
ஆதலினால் -
ஆதலால்; அம் மலையை இறைஞ்சி ஏகி - அந்தப் பொதிய
மலையை வணங்கி அப்பாலே சென்று; பொன் திணிந்த புனல் பெருகும் -
பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற; பொருநை எனும் திருநதி பின்பு ஒழிய -
தாமிரபரணி என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக; நாகக் கன்று வளர்
-
யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும்; தடஞ்சாரல் மயேந்திரமாம்
நெடுவரையும் -
பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய
மலையையும்; கடலும் - தென் கடலையும்; காண்டிர் - காண்பீர்கள்.

     தமிழை வளர்த்த அகத்திய முனிவனுக்கு இருப்பிடமாதலால் பொதிய
மலையை வணங்கிச் செல்லுமாறு சுக்கிரீவன் கட்டளையிட்டான்.  சங்கம்:
புலவர் கூட்டம்.  அகத்திய முனிவன் வடதிசையிலிருந்து தமிழை வளர்க்கத்
தென்திசை நோக்கி வந்தவனாதலால் அம் முனிவன் இருக்கும் இடத்தில்
தமிழறிந்த புலவர் கூட்டம் நிரம்பியிருத்தல் இயல்பே. நாகம்: மலையில்
வாழ்வது என யானைக்குக் காரணக்குறி. நாகக்கன்று - யானைக் கன்றுகள்.
                                                          31