4481.'வினைவரால் அரிய கோதைப்
      பேதை மென கணைக் கால் மெய்யே
நினைவரால் அரிய நன்னீர்
      நேர்பட, புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம்,
      நெற் சினை, என்னும் செப்பம்
எனைவரால் பகரும் ஈட்டம்; யான்
      உரைத்து இன்பம் என்னோ?

     வினைவரால் அரிய கோதைப் பேதை - ஒவியர்களால் தீட்டு வதற்கு
அரிய கூந்தலையுடைய பேதைமைத் தன்மையுள்ளவளான சீதை யின்; மென்
கணைக்கால் -
மெல்லிய கணுக்கால்கள்; மெய்யே - உண்மையாகவே;
நேர்பட நினைவரால் அரிய நன்னீர் -
ஊகித்து உணர்பவராலும் (உவமை
கூறுவதற்கு) அரியனவான நல்ல இயல்பு டையன; புலவர் போற்றும் - புலவர்
உவமையாகப் பொருந்திக் கூறு கின்ற; சினைவரால் - கருக்கொண்ட வரால்
மீனும்; பகழி ஆவம் - அம்பறாத் தூணியும்; சினை நெல் - சூல் கொண்ட
நெற் பயிரும்; என்னும் - என்கின்ற; செப்பம் - சொற்கள்; எனைவரால்
பகரும் -
எல்லோராலும் சொல்லக் கூடிய; ஈட்டம் - தன்மையுடையன
(அவற்றையே); யான் உரைத்து இன்பம் என்னோ - திரும்பவும் நான்
எடுத்துக் கூறுவதால் வரும் இன்பம் யாதோ?

     புலவர்கள், மகளிர் கணைக்காலுக்கு உவமையாகக் கூறிவருகின்ற வரால்
முதலியவற்றையே சீதையின் கணைக் காலுக்கு நானும் உவமையாக எடுத்துச்
சொல்வது சிறிதும் இன்பம் தராது என்பது.  எதிர் நிலையணி.  வினைவர்:
ஒவியம் தீட்டுவோர். வினைவர், நினைவர் - வினையாலணையும் பெயர்கள்.
                                                           35