4482. | 'அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் வரம்பையும் கடந்தபோது, மற்று உரை வகுக்கல் ஆமோ? நரம்பையும், அமிழ்த நாறும் நறவையும், நல்நீர்ப் பண்ணைக் கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய். |
அளக மாதர் குறங்கினுக்கு - கூந்தலையுடைய பெண்களின் தொடைகளுக்கு; அரம்பை என்று அமைந்த - வாழைகள் என்று ஏற்பட்ட; ஒப்பின் வரம்பையும் - உவமையின் எல்லையையும்; கடந்த போது - (சீதையின் தொடைகள்) வென்றன என்றபோது; மற்று உரை வகுக்கல் ஆமோ - (அவற்றிற்கு) வேறு உவமைகளை எடுத்துக் கூற இயலுமோ? (இயலாது); நரம்பையும் - நரம்புகளையுடைய யாழினையும்; அமிழ்த நாறும் நறவையும் - அமிழ்தம்போல இனிமை விளங்கும் தேனையும்; நல் நீர்ப்பண்ணைக் கரும்பையும் - நல்ல நீர்வளமுள்ள வயல்களில் விளைந்த கரும்பின் சாற்றையும்; கடந்த சொல்லாள் - வெற்றி கொண்ட சொற்களையுடைய சீதையின்; கவாற்கு - தொடை களுக்கு; இது - (முன்னர்ச் சுட்டிய) வாழைபோன்ற வேறு உவமைகள்; கருது கண்டாய் - (பொருந்தா என்பதை நீ) நினைந்து ஆராய்வாய். கண்டாய்: முன்னிலையசை; தேற்றமும் ஆகும். பெண்களின் தொடைகளைவிட வாழைகள் அழகில் சிறந்திருக்கும்; அந்த வாழைகளையும் சீதையின் தொடைகள் வென்றன என்றதால் அவற்றிற்கு வேறு உவமானப் பொருள் எடுத்துக் கூறல் அரியதாயிற்று. நரம்பு: யாழுக்குச் சினையாகுபெயர். கரும்பு: அதன் சாற்றுக்கு இலக்கணை. கவான் -தொடை 36 |