4483.'வார் ஆழிக் கலசக்
      கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
தார் ஆழி, கலை சார் அல்குல்
      தடங்கடற்கு உவமை - தக்கோய்! -
பார் ஆழிப் பிடரில் தாங்கும்
      பாந்தளும், பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா,
      உனக்கு நான் உரைப்பது என்னோ?

     தக்கோய் - சிறந்தவனே!வார் - கச்சு அணிந்த; ஆழி, கலசக்
கொங்கை -
சக்கரவாகப் பறவையையும் கலசத்தையும் போன்ற முலை
களையும்; வஞ்சிபோல் மருங்குலாள்தன் - வஞ்சிக் கொடி போன்ற
இடையையுமுடைய சீதையின்; தார் - ஒழுங்கான; ஆழி - வட்ட வடிவமான;
கலைசார் அல்குல் தடங்கடற்கு -
மேகலையைச் சார்ந்துள்ள அல்குலாகிய
பெரிய கடலுக்கு; உவமை - உவமிக்கக் கூடிய பொருளாக; ஆழி பார்
பிடரில் தாங்கும் பாந்தளும் -
கடல் சூழ்ந்த இப் பூமியைத்தன் தலையில்
தாங்குகின்ற ஆதிசேடனது படமும்; பனி வென்று ஓங்கும் ஓர்
ஆழித்தேரும் -
பனியை அடக்கி மேலே உயர்ந்து விளங்குகின்ற ஒற்றை
உருளையுடைய (சூரியனின்) தேர்த் தட்டும்; ஒவ்வா - பொருந்திவாரா;
உனக்கு -
(யாவும் தெரிந்த) உனக்கு; நான் உரைப்பது - நான் புதிதாகக் கூற
வேண்டுவது; என்னோ - என்ன உள்ளது? (எதுவுமில்லை)

     ஆதிசேடனது படத்தையும், கதிரவனின் தேர்த்தட்டையுமே சீதையின்
அல்குலுக்கு உவமையாகக் கூறினும் பொருந்தா என்பது.  சக்கரவாகமும்
பொற்கலசமும் தனங்களுக்கு வடிவு பற்றிவந்த உவமைகள். ஓராழித் தேர் -
ஒற்றைச் சக்கரமுடைய கதிரவன் ஊரும் தேர்.  ஆழி என்ற சொல்
நான்கடிகளிலும் வந்துள்ளது.  சொற் பின்வரு நிலையணி.

     ஆழி - சக்கரவாகப் பறவை. கலை - ஆடையெனினும் அமையும். 37