4484. | 'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள் இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின், கட்டுரைத்து உவமை காட்ட, கண்பொறி கதுவா; கையில் தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை. |
சட்டகம் தன்னை நோக்கி - (சீதையின்) வடிவ அழகைக் கண்டு; யாரையும் சமைக்கத் தக்காள் - எத்தகைய அழகுள்ள பெண்களையும் (பிரமன்) படைக்கத் தகுந்த பேரழகையுடையவளின்; இட்டு இடை இருக்கும் தன்மை - சின்ன இடை அமைந்துள்ள வகையை; இயம்பக் கேட்டு உணர்தி என்னின் - உவமை சொல்லக் கேட்டு நீ அறிய வேண்டுமென்றால் (அது முடியாது; ஏனென்றால்); கட்டு உரைத்து உவமை காட்ட - உறுதியாக எடுத்துச் சொல்லி உவமானப் பொருளைக் காட்டுவதற்கு; கண் பொறி கதுவா - (அந்த இடையைக்) கண்ணாகிய பொறியால் காணமுடியாது (அந்த இடை கண்ணுக்குப் புலனாகாது); கையில் தொட்ட - கைகளால் தீண்டித் துய்த்த; எற்கு உணரல் ஆம் - என்னால் மாத்திரமே (உண்டென்று) அறியக் கூடும்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை - வேறு வகையில் உண்டு என்று சொல்வதற்கும் வழியில்லை. அழகிய பெண்களைப் படைப்பதற்குப் பிரமன் முன்மாதிரியாகக் கொள்வது சீதையின் வடிவமே என்பது கருத்து. சீதையின் இடை பரிசவுணர்ச்சியின் மூலமாக என்னால் மாத்திரமே உண்டென்று உணரப் படுவது; ஒருவரின் கண்ணுக்குப் புலனாகாதவாறு மிகவும் நுண்ணியது; ஆதலால், அதற்கேற்ற உவமைப் பொருளை எடுத்துச் சொல்லுவது முடியாது என்பது. எத்துணை அழகுள்ள பெண்களைப் படைக்க விரும்பினாலும் பிரமன் இவளது வடிவத்தையே மாதிரியாக வைத்துப் படைக்குமாறு அழகோவியமாக உள்ளாள் சீதையெனச் சீதையின் பேரழகைக் குறித்தவாறு. சட்டகம் - வடிவு 38 |