4487. | 'மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என், உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்கவேண்டின், செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர, குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு, என்று உணர்ந்து கோடி. |
வல்லிசேர் வயிற்றின் - கொடி போன்ற சீதையின் வயிற்றிலே; மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டு - மயிரொழுங்கு என்ற ஒன்று உள்ளது; என் உயிர் ஒழுக்கு - (அஃது) எனது உயிரின் ஒழுக்கேயாகும்; அதற்கு வேண்டும் உவமை ஒன்று - அதற்கு யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க ஓர் உவமையை; உரைக்க வேண்டின் - சொல்ல வேண்டுமானால் (அது முடியாது); செயிர் இல் சிறு இடையாய் உற்ற - (ஆயினும்) குற்றமற்ற நுண்ணிய இடையென்று அமைந்த; சிறு கொடி - சிறிய கொடியின்; நுடக்கம் தீர - தளர்ச்சி ஒழிய(ப் படருமாறு); குயிலுறுத்து - நன்றாகப் பதியும்படி; அமைய வைத்த - பொருந்த வைத்த; கொழு கொம்பு என்று - கொழு கொம்பாகு மென்று; உணர்ந்து கோடி - அறிந்து கொள்வாய். சீதையின் வயிற்றில் நெடுக உள்ளதை உலகத்தவர் மயிரொழுங்கு என்பார்கள்; ஆனால், அது மயிரொழுங்கன்று: எனது உயிரொழுங்காம் என்பது. இடைக்கு மேற்புறத்திலுள்ள அந்த வயிற்றின் மயிரொழுங்கிற்கு உவமைகூற இயலாது; ஆனால் இடையாகிய கொடி துவளாமல் படர்வதற்க நாட்டிய கொழு கொம்பு போன்றது எனலாம் என்றான் இராான். அவநுதி அங்கமாய தற்குறிப்பேற்றவணி. வல்லி -உவமையாகுபெயர். 41 |