4489. | 'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இளநீரும் தேர்வென்; துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பை; தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கரவாகம் என்பென்; ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்; பல நினைந்து உலைவென், இன்னும். |
செப்பு என்பென் - (சீதையின் முலை) இரத்தினச் சிமிழ் என்று கூறுவேன்; கலசம் என்பென்- (பொற்) கும்பம் என்று கூறுவேன்; செவ் இளநீரும் தேர்வென் - செவ்விளநீர் என்று ஆராய்வேன்; துப்பு ஒன்று திரள் சூது என்பென் - பவழத்தில் கடைந்து செய்யப்பட்ட சொக்கட்டான் காயென்று கூறுவேன்; தும்பிக் கொம்பைச் சொல்லுவென் - யானையின் தந்தங்களைச் சொல்வேன்; தப்பு இன்றிப் பகலில் வந்த - தவறாமல் பகற்காலத்தில் வெளிப்பட்டுவந்த; சக்கரவாகம் என்பென் - சக்கரவாகமென்று கூறுவேன்; ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் - (என்றாலும் சீதையின் முலைகளுக்கு ஏற்ற) உவமைப் பொருள் ஒன்றையும் அறியாத நான்; பல நினைந்து - (இவ்வாறு) பலவாறாக நினைந்து (அவற்றும் எதுவும் ஏற்ற உவமைப் பொருளாகாமையால்); இன்னும் உலைவென் - இன்னமும் வருந்துவேன். சக்கரவாகம்: சூரியக் கதிர்களையருந்தும் இயல்புடைய இணைபிரியாப் பறவை. இராமன் 'ஒப்பொன்றும் காணேன்' என்றமையால் அவற்றிற்கு அவையே ஒப்பு என்று கருதினான் என்பது -பொதுநீங்குவமையணி. 43 |