4490.'கரும்பு கண்டாலும்,  மாலைக்
      காம்பு கண்டாலும், ஆலி
அரும்புகண், தாரை சோர
      அழுங்குவேன்; அறிவது உண்டோ?
கரும்பு கண்டு ஆலும் கோதை
      தோள் நினைந்து, உவமை சொல்ல,
இரும்பு கண்டனைய நெஞ்சம்,
      எனக்கு இல்லை; இசைப்பது என்னோ?

     கரும்பு கண்டாலும் - கரும்பைக் கண்ட பொழுதும்; மாலைக் காம்பு
கண்டாலும் -
வரிசையாகவுள்ள மூங்கிலைக் கண்ட போதும்; கண் அரும்பு -
கண்களிலிருந்து; ஆலி தாரை சோர அழுங்குவேன் - மழைத் துளிபோன்ற
நீர் தாரையாகப் பெருக மனம் வருந்துவேன்; அறிவது உண்டோ - (இவ்வாறு
வருந்துவதல்லாமல்) (அவள் தோள்களுக்கு இணையாக ஏற்ற உவமையைத்)
தேர்ந்து அறிதல் உண்டோ?  (இல்லை); சுரும்பு கண்டு ஆலும் - வண்டுகள்
கண்டு மொய்த்து ஒலிப்பதற்கு இடமான; கோதை தோள் நினைந்து -
மாலையைத் தரித்த சீதையின் தோள்களை நினைத்து; உவமை சொல்ல -
உவமை சொல்வதற்கு; இரும்பு கண்டனைய நெஞ்சம் - இரும்பு போன்ற
வலிய மனம்; எனக்கு இல்லை - எனக்கு இல்லையே; இசைப்பது
என்னோ-
(நான்) உவமை கூறுவது எவ்வாறு?

     ஓ - வினாப் பொருளில் வந்தது.  சீதையைப் பிரிந்துள்ள இந்த
நிலையில் கரும்பையும் மூங்கிலையும் காண நேரும்போதெல்லாம் சீதையின்
தோள்கள் நினைவுக்குவரக் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருக வருந்துவேன்;
மிக மெல்லிய அச்சீதையின் தோள்களுக்குக் கடினமான கரும்பையும்
மூங்கிலையும் உவமை கூற முடிந்ததே தவிர இன்னும் பொருத்தமான உவமை
கூற இரும்புபோன்ற வன்னெஞ்சம் தனக்கு இல்லையே என்று இராமன்
கூறினான்.  கரும்பும் மூங்கிலும்: வடிவமும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி
அழகிய மகளிர் தோளுக்கு உவமையாயின.  கோதை - ஆகுபெயர்.
ஒப்புடைய பொருள்களைக் கண்டு, பிரிந்தவர் வருந்துவது இயல்பாதலின்
'கண்தாரை சோர அழுங்குவேன்' என்று இராமன் வருந்தினான்.         44