4492.'  ''ஏலக் கோடு ஈன்ற பிண்டி
      இளந் தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை,
      நறுங் கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள்தன்
      நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும்என்றால், கைக்கு
      ஒப்பு வைக்கலாமோ?

     பிண்டி ஏலக்கோடு - அசோகமரத்தின் மணமுள்ள கிளைகள்; ஈன்ற
இளந்தளிர் கிடக்க -
தோற்றுவித்த இளந்தளிர்கள் ஒரு புறம் இருக்கட்டும்;
யாணர்க் கோலக் கற்பகத்தின் காமா குழை -
புதிய அழகுள்ள கற்பக
மரத்தின் விரும்பத் தக்க தளிர்களும்; கமலம் நறு மென்பூ - தாமரைக்
கொடியில் தோன்றுகின்ற மெல்லிய மலர்களும்; நூல் ஒக்கும்
மருங்குலாள்தன் -
நூலைப் போல நுட்பமான இடையையுடைய சீதையின்;
நூபுரம் புலம்பும் கோலக் காலுக்கும் -
சிலம்புகள் ஒலிக்கும் அழகிய
கால்களுக்கே; தொலையும் என்றால் - தோற்றப் போகுமென்றால்; கைக்கு
ஒப்பு வைக்கலாமோ -
(அவற்றைக்) கைகளுக்கு உவமை கூறுதல்
பொருந்துமோ?

     ஓ - வினா. கற்பகத்தளிரும், தாமரை மலரும் சீதையின் தாழ்ந்த
உறுப்பாகிய கால்களுக்கே இணையாகாமல் தோற்றனவென்றால் மேலான
உறுப்பாகிய கைகளுககு ஒப்பாகமல் அவை தோற்குமெனச் சொல்லவும்
வேண்டுமோ? சொல்லவே தேவையில்லை என்பது.                  46