4493.'வெள்ளிய முறுவல், செவ் வாய், விளங்கு
     இழை, இளம் பொற் கொம்பின்
வள் உகிர்க்கு, உவமை நம்மால்
      மயர்வு அற வகுக்கலாமோ?
''எள்ளுதில் நீரே மூக்கை'' என்று
      கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள், முருக்கின் பூவைக்
      கிழிக்குமேல், உரைக்கலாமோ?

     வெள்ளிய முறுவல் - வெண்மையான பற்களையும்; செவ்வாய் -
சிவந்த வாயையும்; விளங்கு இழை - ஒளி விடுகின்ற அணிகலன்
களையுமுடைய; இளம் பொன் கொம்பின் - இளமையான அழகிய
பூங்கொம்பு போன்ற சீதையின்; வள் உகிர்க்கு - கூர்மைமான நகங்களுக்கு;
உவமை -
உவமையாகக் கூடிய பொருள்களை; நம்மால் மயர்வு அற
வகுக்கலாமோ -
நம்மைப் போன்றவர்களால் மயக்கமில் லாமல் (தெளிவாக)
எடுத்துக்கூற இயலுமோ? (இயலாது); கிள்ளைகள் - கிளிகள்; நீரே மூக்கை
எள்ளுதிர் -
(கல்யாண முருங்கைக் மலர்களைப் பார்த்து) நீங்கள் எமது
மூக்கை (சீதையின் கைந்நகங்களுக்குப் பொருந்தாமை குறித்து)
இகழ்கின்றீர்கள்; என்று கொண்டு - என்று மனத்தில் கொண்டு;
இவறி - (அவற்றின்மேல்) கோபங்கொண்டு; முருக்கின் பூவை -
அந்தக் கல்யாண முருங்கை மலர்களை (தம்மைப் பழிக்கும் மகளிர்
வாயென்றே மயங்கி); எனறும் கிழிக்குமேல் - எப் பொழுதும்
கிழிக்குமானால்; உரைக்கலாமோ - (கிளியின் மூக்கைச் சீதையின்
கைந்நகங்களுக்கு உவமையாக) எடுத்துச் சொல்லலாமோ?

     கல்யாண முருக்க மலரை மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறுதல் மரபு.
கிளிகள் முருக்கமலரைத் தமது அலகால் இயல்பாகக் கோதும்;
இத்தன்மைகளைக் கொண்டு தமது மூக்கைச் சீதையின் கைந்நகங்களுக்கு
ஒப்பாகாது என்று பழிக்கும் பெண்களின் வாயென்று முருக்க மலரைக் கருதிக்
கிளிகள் அவற்றிடம் கோபங் கொண்டு அவற்றைக் கோதிக் கிழிக்கின்றன
என்றான்.  வெள்ளிய முறுவல் செவ்வாய்: முரண்தொடை. இவறுதல்:
பொறாமையயால் சினங்கொள்ளுதல்.  இச்செய்யுளில் மயக்கவணியை
அங்கமாகக் கொண்ட ஏதுத் தற்குறிப்பேற்றவணியும் எதிர்நிலையணியும்
அமைந்துள்ளன.                                              47