4498.'ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும்
      மூக்கு ஒக்கும் என்றால்,
சோதி செம் பொன்னும், மின்னும்,
      மணியும்போல், துளங்கித் தோன்றா;
ஏதுவும் இல்லை; வல்லார்
      எழுதுவார்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி, நீயே
      நினைதியால், - நெடிது காண்பாய்!

     நெடிது காண்பாய் - (எதிர்காலத்தையும் கணிக்கும்) தொலை நோக்கு
உடையவனே; ஓதியும் - பச்சோந்தியையும்; எள்ளும் - எள் மலரையு
தொள்ளைக் குமிழும் -
தொளையுள்ள குமிழம் பூவையும்; மூக்கு -
(சீதையின்) மூக்கானது; ஒக்கும் என்றால் - ஒத்திருக்கும் என்று சொன்னால்
(அப்பொருள்கள்); சோதி செய் பொன்னும் - ஒளி வீசுகின்ற பொன்னையும்;
மின்னும் மணியும் போல் -
ஒளிவிடுகின்ற இரத்தினங்களையும் போல;
துளங்கித் தோன்றா -
விளங்கிக் காணப்படா; ஏதுவும் இல்லை - (அவ்வாறு
ஒளி வீசுதற்குரிய) காரணமும் (அப் பொருள்களிடம்) இல்லை; எழுதுவார்
வல்லார்க்கு -
(இன்னும்) ஓவியம் தீட்டுவதில் திறமை பெற்றவர்களுக்கும்;
எழுத ஒண்ணா -
தீட்ட முடியாத; நீதியை நோக்கி - (மூக்கின்) இத்
தன்மையை ஆராய்ந்து பார்த்து; நீயே நினைதி - (அதன் அழகை) நீயே
உணர்ந்து கொள்வாய்.

     சீதையின் மூக்கு, பொன் போலவும், இரத்தினம் போலவும்
ஒளிவிடுகின்றதே; அவ்வாறிருக்க அம்மூக்கிற்குப் பச்சோந்தி முதலியன
எவ்வாறு உவமையாகும்? உவமையாகமாட்டா.  மேலும், ஓவியத்தில்
எழுதமுடியாதவாறு பேரொளி மிகுந்து அழகு கூடியிருத்தலால் அதன் சிறப்புத்
தன்மையை ஊகித்து அறிவாய் என்பது.

     வேற்றுமையணியை அங்கமாகக் கொண்டு வந்த எதிர்நிலையணி. ஓதி -
(ஓந்தி): இடைக்குறை.  தொள்ளை - (தொளை) : விரித்தல் விகாரம். ஒளியும்
வடிவழகும் பெற்ற சீதையின் மூக்கிற்கு உவமையில்லைஎன்றவாறு.       52