4498. | 'ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால், சோதி செம் பொன்னும், மின்னும், மணியும்போல், துளங்கித் தோன்றா; ஏதுவும் இல்லை; வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா நீதியை நோக்கி, நீயே நினைதியால், - நெடிது காண்பாய்! |
நெடிது காண்பாய் - (எதிர்காலத்தையும் கணிக்கும்) தொலை நோக்கு உடையவனே; ஓதியும் - பச்சோந்தியையும்; எள்ளும் - எள் மலரையு தொள்ளைக் குமிழும் - தொளையுள்ள குமிழம் பூவையும்; மூக்கு - (சீதையின்) மூக்கானது; ஒக்கும் என்றால் - ஒத்திருக்கும் என்று சொன்னால் (அப்பொருள்கள்); சோதி செய் பொன்னும் - ஒளி வீசுகின்ற பொன்னையும்; மின்னும் மணியும் போல் - ஒளிவிடுகின்ற இரத்தினங்களையும் போல; துளங்கித் தோன்றா - விளங்கிக் காணப்படா; ஏதுவும் இல்லை - (அவ்வாறு ஒளி வீசுதற்குரிய) காரணமும் (அப் பொருள்களிடம்) இல்லை; எழுதுவார் வல்லார்க்கு - (இன்னும்) ஓவியம் தீட்டுவதில் திறமை பெற்றவர்களுக்கும்; எழுத ஒண்ணா - தீட்ட முடியாத; நீதியை நோக்கி - (மூக்கின்) இத் தன்மையை ஆராய்ந்து பார்த்து; நீயே நினைதி - (அதன் அழகை) நீயே உணர்ந்து கொள்வாய். சீதையின் மூக்கு, பொன் போலவும், இரத்தினம் போலவும் ஒளிவிடுகின்றதே; அவ்வாறிருக்க அம்மூக்கிற்குப் பச்சோந்தி முதலியன எவ்வாறு உவமையாகும்? உவமையாகமாட்டா. மேலும், ஓவியத்தில் எழுதமுடியாதவாறு பேரொளி மிகுந்து அழகு கூடியிருத்தலால் அதன் சிறப்புத் தன்மையை ஊகித்து அறிவாய் என்பது. வேற்றுமையணியை அங்கமாகக் கொண்டு வந்த எதிர்நிலையணி. ஓதி - (ஓந்தி): இடைக்குறை. தொள்ளை - (தொளை) : விரித்தல் விகாரம். ஒளியும் வடிவழகும் பெற்ற சீதையின் மூக்கிற்கு உவமையில்லைஎன்றவாறு. 52 |