4499.'வள்ளை, கத்திரிகை வாம மயிர்
      வினைக் கருவி என்ன,
பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர்
      உரைக்கின் பித்து ஆம்;
வெள்ளி வெண் தோடு செய்த
      விழுத் தவம் விளைந்தது என்றே
உள்ளுதி; உலகுக்கு எல்லாம்
      உவமைக்கும், உவமை உண்டோ?

     வள்ளை - (பெண்களின் காதுகளுக்கு) வள்ளைக் கொடியின் இலையும்;
கத்தரிகை -
கத்திரிக் கோலும்; வாம மயிர் வினைக்கருவி - அழகிய மயிர்
நீக்கும் கருவியும்; என்ன - என்று; பிள்ளைகள் உரைத்த ஒப்பை -  அறிவு
நிரம்பாதவர்கள் சொல்லிய உவமைகளை; பெரியவர் - அறிவு முதிர்ந்த
சான்றோர்; உரைக்கின் - (சீதையின் காதுகளுக்கு உவமைகளாகச்)
சொன்னால்; பித்து ஆம் - (அது) பித்தம் பிடித்தவர் சொல்லாகும் (சிறிதும்
பொருந்தாது); வெள்ளி வெண்தோடு - (அவள் அணிந்துள்ள) வெள்ளி
போன்ற வெண்ணிறமான தோடு என்னும் காதணி; செய்த - முன்பு செய்த;
விழுத் தவம் விளைந்தது என்றே -
சிறந்த தவமே (சீதையின் செவிகளாக)
வந்தது என்றே; உள்ளுதி - நினைவாய்; உலகுக்கெல்லாம் - உலகிலுள்ள
பொருள்களுக்கெல்லாம்; உவமைக்கும் - உவமையாகச் சொல்லுதற்குரிய
ஒன்றுக்கும்; உவமை உண்டோ - வேறு ஓர் உவமைப் பொருள்
கிடைக்குமோ?

     சீதையின் காதுகள் உலகிலுள்ள அழகிய பெண்களின் காதுகளுக்கும்
தாம் உவமையாகுமாறு அழகு மிகுந்திருப்பதால், அவற்றிற்கு வேறு ஓர்
உவமானப் பொருள் இல்லை என்பது. பிள்ளைகள்: இளமைத் தன்மையர்;
அறிவு நிரம்பாதவர்கள். வள்ளை - முதலாகு பெயர். வேற்றுப்பொருள்
வைப்பணி.                                                  53