4499. | 'வள்ளை, கத்திரிகை வாம மயிர் வினைக் கருவி என்ன, பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்; வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே உள்ளுதி; உலகுக்கு எல்லாம் உவமைக்கும், உவமை உண்டோ? |
வள்ளை - (பெண்களின் காதுகளுக்கு) வள்ளைக் கொடியின் இலையும்; கத்தரிகை - கத்திரிக் கோலும்; வாம மயிர் வினைக்கருவி - அழகிய மயிர் நீக்கும் கருவியும்; என்ன - என்று; பிள்ளைகள் உரைத்த ஒப்பை - அறிவு நிரம்பாதவர்கள் சொல்லிய உவமைகளை; பெரியவர் - அறிவு முதிர்ந்த சான்றோர்; உரைக்கின் - (சீதையின் காதுகளுக்கு உவமைகளாகச்) சொன்னால்; பித்து ஆம் - (அது) பித்தம் பிடித்தவர் சொல்லாகும் (சிறிதும் பொருந்தாது); வெள்ளி வெண்தோடு - (அவள் அணிந்துள்ள) வெள்ளி போன்ற வெண்ணிறமான தோடு என்னும் காதணி; செய்த - முன்பு செய்த; விழுத் தவம் விளைந்தது என்றே - சிறந்த தவமே (சீதையின் செவிகளாக) வந்தது என்றே; உள்ளுதி - நினைவாய்; உலகுக்கெல்லாம் - உலகிலுள்ள பொருள்களுக்கெல்லாம்; உவமைக்கும் - உவமையாகச் சொல்லுதற்குரிய ஒன்றுக்கும்; உவமை உண்டோ - வேறு ஓர் உவமைப் பொருள் கிடைக்குமோ? சீதையின் காதுகள் உலகிலுள்ள அழகிய பெண்களின் காதுகளுக்கும் தாம் உவமையாகுமாறு அழகு மிகுந்திருப்பதால், அவற்றிற்கு வேறு ஓர் உவமானப் பொருள் இல்லை என்பது. பிள்ளைகள்: இளமைத் தன்மையர்; அறிவு நிரம்பாதவர்கள். வள்ளை - முதலாகு பெயர். வேற்றுப்பொருள் வைப்பணி. 53 |