4508.'குழல் படைத்து, யாழைச் செய்து
      குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து,
      வடித்ததை, மலரின் மேலான்,
இழை பொரும் இடையினாள்தன்
     இன் சொற்கள் இயையச் செய்தான்;
பிழை இலது உவமை காட்டப்
      பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்?

     குழல் படைத்து - வேய்ங்குழலையுண்டாக்கியும்; யாழைச் செய்து -
யாழ்க் கருவியை வகுத்தமைத்தும்; குயிலொடு கிளியும் கூட்டி - குயிலையும்
கிளியையும் படைத்தும்; மழலையும் பிறவும் தந்து - (எழுத்து நிரம்பாத)
மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை
இயற்றியும்; வடித்ததை - பழகித் தேர்ந்த நயத்தை; மலரின் மேலான் -
தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் (பின்பு); இழை பொரும்
இடையினாள்தன் -
நூலிழையோடு மாறுபடுகின்ற நுண்ணிய இடையையுடைய
சீதையின்; இன் சொற்கள் இயையச் செய்தான் - இனிய சொற்களுக்கும்
பொருந்துமாறு அமைத்தான்; பிழை இலது - (ஆனால் அச்சொற்களுக்குக்)
குற்றமற்ற; உவமை காட்டப் பெற்றிலன் - உவமைப் பொருள் எதையும்
உண்டாக்கவில்லை; இன்னும் பெறும் கொல் - இனிமேலாவது (அவன்)
படைப்பானோ? (அறியாம்).

     பிரமன் சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில்
வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே
அச்சீதையின் சொற்களைப் படைத்தான்; ஆகவே, அவற்றிற்கேற்ற உவமப்
பொருள்களை இதுவரையிலும் பிரமன் படைக்க வில்லை.  குழல்
முதலியவற்றின் இனிமை முழுவதும் சீதையின் சொற்களில் ஒருங்கே
திரண்டுள்ளன என்பது.  குழல், யாழ், குயில், கிளி - (ஒலிக்கு) முதலாகு
பெயர்கள்.

ஒப்பு: 'பளிதமும் பாலும் ஒழுகிய தேனுமா ரமுதும்
குயிலினில் குரலும் கிளியினில் மொழியும்
மயிலியற் சாயல் வாணுதல் தனக்கு
மலரயன் வகுத்த தேன்மொழியாள்' - (அரிச். புரா)                  62