4511.'எந் நிறம் உரைக்கேன்? - மாவின்
      இள நிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால்,
      மணி நிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும்
     வெளிப்படா ஒலிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்;
      மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!

மாவின் இள நிறம்  முதிரும் - (சீதையின் மேனி நிறத்திற்கு உவமை
வேண்டுமானால்) மாமரத்தின் இளந்தளிரினது நிறம் முதிர்ந்து மாறும்
இயல்பினது; பொன் நிறம் கருகும் - பொன்னின் நிறமும் (இவள் நிறத்துக்கு
முன்பு) கறுத்துத் தோன்றும் (ஆகையால் மாந்தளிர் நிறம் முதலியன
உவமையாகா; அவ்வாறே); மணி நிறம் உவமை போதா - இரத்தினங்களின்
நிறமும் உவமையாவதற்கு ஏற்ற ஒளியுடையதாகாது; மின் நிறம் நாணி -
மின்னலின் நிறமோ? (சீதையின் நிறத்தைக் கண்டு) வெட்கப்பட்டு; எங்கும்
வெளிப்படா ஒளிக்கும் -
எந்த இடத்தும் தலைகாட்டாமல் மறைந்து
விடும்; மலர் நிறம்  சமழ்க்கும் - தாமரை மலரின் நிறமும் நாணும்;
எந்நிறம் உரைக்கேன் - (இவ்வாறுள்ளது என்றால்) வேறு எந்த
நிறத்தை உவமையாகச் சொல்வேன்? வேண்டின் - (எப்படியாவது) உவமை
கூறியேயாக வேண்டும் என்றால்; தன் நிறம் தானே ஒக்கும் - (சீதையின்)
நிறம் தனக்குத் தானே ஒப்பாகும்.

     மாந்தளிர், பொன், இரத்திரனங்கள், மின்னல், தாமரை மலர் என்பவற்றை
மகளிர் மேனி நிறத்துக்கு உவமை கூறுதல் கவி மரபு.  ஆனால் இவற்றினும்
சீதையின் மேனி நிறம் அழகில் விஞ்சியிருக்கும் என்பது.  ஏதுத்
தற்குறிப்பேற்றவணி.  அன்றே: ஈற்றசை, தேற்றமும் ஆம்; மற்றை: அசை,
மின்னல் இயல்பாகத் தோன்றி மறைவதைச் சீதையின் மேனி நிறத்தைக் கண்டு
வெட்கப்பட்டு மறைவதாகக் கூறினான்.  சமழ்த்தல்:நாணுதல்.            65