4512.' ''மங்கையர் இவளை ஒப்பார், மற்று
      உளார் இல்லர்'' என்னும்
சங்கை இல் உள்ளம் தானே சான்று எனக்
      கொண்டு , - சான்றோய்! -
அங்கு அவள் நிலைமை எல்லாம்
      அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
திங்கள் வாள் முகத்தினாட்கு, செப்பு'
      எனப் பின்னும் செப்பும்;

     சான்றோய் - நற்பண்புகள் நிறைந்தவனே!இவளை ஒப்பார் - சீதைக்கு
நிகரான; மற்று மங்கையர் உளார்இல்லர்என்னும் - வேறு பெண்கள் எவரும்
இல்லை என்னும்படி; சங்கை இல் உள்ளம் தானே - ஐயமில்லாத உனது
மனத்தையே; சான்று எனக் கொண்டு - சாட்சி யாகக் கொண்டு; அங்கு -
அச் சீதையிருக்கும் இடத்தில்; அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து
-
அவளது தன்மை முழுவதையும் தெளிவாக ஆராய்ந்து அறிந்து (துணிந்த
பின்பு); அருகு சார்ந்து - அவளுக்குப் பக்கத்தில் போய்; திங்கள் வாள்
முகத்தினாட்கு -
முழுமதி போன்ற ஒளி நிறைந்த முகத்தையுடைய
அச்சீதைக்கு; செப்பு - (நான் கூறும் அடையாள மொழிகளைச்) சொல்வாய்;
என -
என்று; பின்னும் செப்பும் - மீண்டும் கூறுவான்.

     அவள் உருவிலக்கணங்களால் உவமை நீங்கியவள் என்பதைக்
காட்சியளவையால் மட்டுமல்லாமல் ஐயம் நிகழ்ந்துவிடத்து உள்மனம் எதைத்
துணிகின்றதோ அதனையே உறுதியெனக் கொண்டு, கொண்டு தெளிவாய்
என்றான் என்பது.

     சான்றெனக் கொண்டு சான்றோய் - சொல்நயம்.  4479 ஆம் பாடல்
தொடங்கி 4512 ஆம் பாடல் முடியவுள்ள பாடல்கள்பற்றி மனத்தே தோன்றும்
ஒரு கருத்தோட்டத்தைப் புலப்படுத்துவது சரியானதென்றே தோன்றுகிறது.
பாதாதிகேச வருணனையும் வேறு சில குறிப்புகளையும் இப் பாடல்களில்
காணமுடிகிறது. பாதாதி கேச வருணனை தெய்வப் பாத்திரங்களுக்கு உரியது
என்ப தொருமரபு உண்டு. அவ்வகையில் இப்பாடல்களைக்கவி மரபாகமட்டும்
கொண்டு ஏற்கலாமெனத் தோன்றுகிறது.  4483 ஆம்பாடலுக்கு உரிய
விளக்கத்தில், 'இம் மாதிரியான உறுப்பிலக்கண வருணனை மிகையென்று
கூறுமவர், சாமுத்திரிக இலக்கணத்தைக் கூறவேண்டுவது சிறந்த கவிஞரின்
பொறுப்பென்பதைக் கருத்துட் கொள்க' என்று அமைதி கூறப்பட்டுள்ளது.
(ஐயரவர்கள் நூலகப் பதிப்பு - கிட்கிந்தா காண்டம் - பக் 768) உறுப்பு
வருணனை - அதுவும் பிராட்டி போன்ற தெய்வத் திறமுடையார் பற்றிய
உறுப்பு வருணனையில் ஒருவகை நெறிமுறை வேண்டாவா என்று எழும்
எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  கண்ணகியாரின் உறுப்பு
வருணனையில் கோவலன் ஈடுபடுவதாகச் சிலப்பதிகாரம் பேசும்.  ஆனால்,
அந்த வருணனை அந்தப்புர வருணனையாய் - வரம்பு கடவாமல் இருப்பது.
இளங்கோவடிகள் காலத்துக்குப் பின் செல்வாக்குப் பெற்ற கவி மரபின்
கொடுமைக்கு இந்தப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்
போலும்.  அற்புதக் கற்பனை வளம் செறிந்த வருணனைதான்; என்றாலும்,
பிறன் ஓர் ஆடவனிடம் பிரித்துரைக்கத் தக்கதோ என்று கலைஞர்களும்
ஆய்வாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.  பிராட்டியின் பாத்திரப்
படைப்பில் உள்ள ஓர் உணர்வு இங்கே நினையத்தக்கது.  மனத்தில் எவ்விதக்
களங்கமும் இல்லா நிலையில் அனுமன் பிராட்டியை அசோகவனத்திலிருந்து
தன் தோளில் சுமந்து செல்ல முன் வந்த போது,

வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும், ''ஆண்'' எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ?
(5363)

என்றெழுந்த பிராட்டியின் சொல்லை நினைந்து பார்க்க வேண்டும்.  இத்துணை
மென்மை நாகரிகப் பிராட்டியின் உறுப்பு வருணனை போகும் பாங்கினை
எண்ணின், கவி மரபின் பெருங் கொடுமைத் திறம் வேதனை தருகிறது.

     மற்றொரு குறிப்பு: இப்பாடல்களை விடுத்துப் படித்தாலும் செய்தித்
தொடர்பு விடவில்லை என்பதையும் கருதிப் பார்க்கலாம்.  வான்மீகமும் இந்த
வருணனை தரவில்லை.  உருப் பொலிவை விட உள்ளப் பண்பின் பொலிவே
போற்றத்தக்கது என்ற விருப்பம் கொண்டு கணித்தால் இனிவரும் பாடல்களே
நய நாகரிக உணர்வின் இமயமாவதை உணர முடிகிறது. சான்றோர்
சிந்தனைக்கு உரிய இடம் இது.                                   66