இராமன் புகன்ற அடையாளச் செய்திகள்

கலிவிருத்தம்

4513.'முன்னை நாள், முனியொடு,
     முதிய நீர் மிதிலைவாய்,
சென்னி நீள் மாலையான்
      வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு
      அருகு நின்றாளை, அக்
கன்னி மாடத்திடைக்
     கண்டதும், கழறுவாய்.

     முன்னை நாள் - முன்னாளில்; முனியொடு - விசுவாமித்திர
முனிவருடன்; முதிய நீள் மிதிலை வாய்  - நீர்வளம் உள்ள பழமையான
மிதிலா நகரத்தில்; சென்னி நீள் மாலையான் - தலையில் நீண்ட மாலை
புனைந்தவனான சனக மன்னனது; வேள்வி காணிய - யாகத்தைக்
காண்பதற்காக; செல - (நான்) சென்றபோது; அன்னம் ஆடும் துறைக்கு
அருகு -
அன்னப் பறவைகள் (தத்தம் பேடைகளுடன்) விளையாடும்
நீர்த்துறைக்கு அருகிலுள்ள; அக் கன்னி மாடத்திடை - அந்தக் கன்னிகா
மாடத்தின் உப்பரிகையில்; நின்றாளை - நின்று கொண்டிருந்த சீதையை;
கண்டதும் -
பார்த்ததையும்; சுழறுவாய் - (நீ) அவளிடம் கூறுவாய்.

     விசுவாமித்திர முனிவன் இராமஇலக்குவரைத் துணையாக வைத்துக்
கொண்டு தனது வேள்வியை முடித்த பின்பு மிதிலையில் சனக மன்னன்
செய்யும் யாகத்தைக் காண்பதற்காக அவர்களுடன் சென்றான்; மிதிலையில்
புகுந்த பின்பு சனக மன்னனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியின்
அருகேயுள்ள கன்னி மாடத்தின்மேல் சீதையிருக்க அவளைத் தான் கண்டதை
இராமன் அடையாளமாக எடுத்துக் கூறுகின்றான்என்பது.               67