4517. | ' ''ஆன பேர் அரசு இழந்து, அடவி சேர்வாய்; உனக்கு யான் அலாதன எலாம் இனியவோ? இனி'' எனா, மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து, ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும், உரைசெய்வாய். |
ஆனபேர் அரசு இழந்து - உனக்குரிய பெரிய அரசை விட்டு; அடவி சேர்வாய் - காட்டிற்குச் செல்பவனே!இனி - இனிமேல்; யான் அலாதன எலாம் - என்னைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும்; உனக்கு இனியவோ - உனக்கு இன்பம் தருவனவோ? (என்னொருத்தியால் மட்டும் உனக்குத் துன்பமோ); எனா - என்று (என்னை நோக்கிக்) கடுமையாகக் கூறி (சீதை); மீன் உலாம் - மீன்கள்போலப் பிறழ் வனவும்; நெடுமலர்க் கண்கள் - பெரிய தாமரைமலரை ஒப்பனவுமாகிய கண்களில்; நீர் விழ விழுந்து - நீர் பெருகக் கண்ணீர் சிந்தி; ஊன் இலா உயிரின் - உடலில் நில்லாது தவிக்கின்ற உயிர் போல; வெந்து அயர்வதும் - மிகவும் தளர்ந்து சோர்ந்ததையும்; உரை செய்வாய் - (நீ அவளிடம்) சொல்வாய். இராமன் வனவாசஞ்செய்யப் புறப்படுகின்ற நேரத்தில் சீதையிடம், 'நீ என்னோடு வருவாயானால் என் துன்பத்திற்குக் காரணமாவாய்' என்று கூற, அது கேட்டுச் சீதை மிகவும் வருந்தி 'என் துறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்' (1833) எனக் கூறியதைக் குறிக்கிறான். அயர்வது: காலவழுவமைதி. 71 |