4517.'  ''ஆன பேர் அரசு இழந்து,
      அடவி சேர்வாய்; உனக்கு
யான் அலாதன எலாம்
      இனியவோ? இனி'' எனா,
மீன் உலாம் நெடு மலர்க்
     கண்கள் நீர் விழ, விழுந்து,
ஊன் இலா உயிரின்
      வெந்து, அயர்வதும், உரைசெய்வாய்.

     ஆனபேர் அரசு இழந்து - உனக்குரிய பெரிய அரசை விட்டு; அடவி
சேர்வாய் -
காட்டிற்குச் செல்பவனே!இனி - இனிமேல்; யான் அலாதன
எலாம் -
என்னைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும்; உனக்கு இனியவோ -
உனக்கு இன்பம் தருவனவோ? (என்னொருத்தியால் மட்டும் உனக்குத்
துன்பமோ); எனா - என்று (என்னை நோக்கிக்) கடுமையாகக் கூறி (சீதை);
மீன் உலாம் -
மீன்கள்போலப் பிறழ் வனவும்; நெடுமலர்க் கண்கள் -
பெரிய தாமரைமலரை ஒப்பனவுமாகிய கண்களில்; நீர் விழ விழுந்து - நீர்
பெருகக் கண்ணீர் சிந்தி; ஊன் இலா உயிரின் - உடலில் நில்லாது
தவிக்கின்ற உயிர் போல; வெந்து அயர்வதும் - மிகவும் தளர்ந்து
சோர்ந்ததையும்; உரை செய்வாய் - (நீ அவளிடம்) சொல்வாய்.

     இராமன் வனவாசஞ்செய்யப் புறப்படுகின்ற நேரத்தில் சீதையிடம், 'நீ
என்னோடு வருவாயானால் என் துன்பத்திற்குக் காரணமாவாய்' என்று கூற,
அது கேட்டுச் சீதை மிகவும் வருந்தி 'என் துறந்தபின் இன்பம் கொலாம்
என்றாள்' (1833) எனக் கூறியதைக் குறிக்கிறான்.  அயர்வது: காலவழுவமைதி.
                                                           71