4518. | 'மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும் கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல்முன், ''எல்லை தீர்வு அரிய வெங் கானம் யாதோ?'' எனச் சொல்லினள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.' |
மல்லர் மாநகர் - வளம் மிகுந்த அயோத்தி நகரத்தை; துறந்து ஏகும்நாள் - நீங்கி (காட்டுக்கு)ச் சென்ற காலத்தில்; மதி தொடும் - சந்திரனைத் தீண்டுகின்ற; கல்லின் மாமதிள் - கற்களாலாகிய பெரிய மதிலின்; மணிக்கடை கடந்திடுதல் முன் - அழகிய வாயிலைக் கடப்பதற்கு முன்பே; எல்லை தீர்வு அரிய வெங்கானம் - எல்லையில்லாத கொடிய கானம்; யாதோ என - எதுவோ என்று; சொல்லினாள் - கேட்டாள்; அஃது எலாம் நீ உணரச் சொல்லுவாய் - அவையனைத்தையும்அவள் மனம் கொள்ளுமாறு உரைப்பாய். 'ஆண்ட நகராரையொடு வாயிலகலாமுன் யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய் (5258) என்ற பின்வரும் வரிகளை நினைக. புகார் நகரத்து எல்லையிலேயே 'மதுரை மூதூர் யாது' (சிலப்.நாடுகாண்.41) என்று கேட்ட கண்ணகி வினாவின் எதிரொலியே 'யாண்டையது கான்' என்ற சீதையின் வினா. சீதையின் கேள்வி, கணவன் மனையையன்றி வேறொன்றையும் அறியாத அச்சீதையின் தன்மையையும், மெல்லியல்பையும், பேதைமையையும் வெளிப்படுத்தும். 72 |