வானரவீரர் நான்கு திசையிலும் செல்லுதல் கலிவிருத்தம் 4521. | போயினார்; போன பின், புற நெடுந் திசைகள்தோறு, ஏயினான், இரவி காதலனும்; ஏயின பொருட்கு ஆயினார், அவரும்; அங்கு அன்ன நாள் அவதியில் தாயினார் உலகினை, தகை நெடுந் தானையார். |
போயினார் - (அங்கதன் முதலிய வானர வீரர்கள் சுக்கிரீவனுடைய கட்டளைப்படி தென் திசை நோக்கிச்) சென்றார்கள்; போயபின் - (அவர்கள் அவ்வாறு) சென்ற பின்பு; இரவி காதலனும் - சூரியன் மகனான சுக்கிரீவனும்; புற நெடுந் திசைகள் தோறும் - (தென்திசைக்குப்) புறம்பான பெரிய பிற திசைகளில் எல்லாம்; ஏயினான் - (விநதன் முதலிய பல வீரர்களை) விடை கொடுத்தனுப்பினான்; ஏயின பொருட்கு - (சுக்கிரீவன்) ஏவின தொழிலாகிய சீதையைத் தேடுவதற்கு; ஆயினார் அவரும் - இசைந்தவரான அந்த வானர வீரரும்; உலகினைத் தகைநெடுந் தானையார் - உலகத்தையே (தமது வன்மையால்) எதிர்த்துத் தடுக்கவல்ல பெருஞ்சேனையை உடையவர்களாய்; அன்ன நாள் அவதியில் - (தம் அரசனான சுக்கிரீவன் குறித்த) அந்த ஒரு மாதத் தவணைக்குள் (தேடித் தருவதற்காக); தாயினார் - விரைந்து சென்றார்கள். மேற்கு, வடக்கு, கிழக்கு என்ற திசைகளில் இடபன், சதவலி, விநதன் என்ற வீரர்களை அனுப்பினான் என்பது. மூன்றாமடி : முற்றுமோனை. ஆங்கு: அசை. உலகினைத் தகை நெடுந்தானையார்: உலகம் முழுவதும் எதிர்த்துவரினும் தடுத்துப் போர் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த வானரவீரர்என்பது. 1 |