வானரவீரர் நான்கு திசையிலும் செல்லுதல்

கலிவிருத்தம்

4521.போயினார்; போன பின்,
      புற நெடுந் திசைகள்தோறு,
ஏயினான், இரவி காதலனும்;
      ஏயின பொருட்கு
ஆயினார், அவரும்; அங்கு
      அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை, தகை
      நெடுந் தானையார்.

     போயினார் - (அங்கதன் முதலிய வானர வீரர்கள் சுக்கிரீவனுடைய
கட்டளைப்படி தென் திசை நோக்கிச்) சென்றார்கள்; போயபின் - (அவர்கள்
அவ்வாறு) சென்ற பின்பு; இரவி காதலனும் - சூரியன் மகனான சுக்கிரீவனும்;
புற நெடுந் திசைகள் தோறும் -
(தென்திசைக்குப்) புறம்பான பெரிய பிற
திசைகளில் எல்லாம்; ஏயினான் - (விநதன் முதலிய பல வீரர்களை) விடை
கொடுத்தனுப்பினான்; ஏயின பொருட்கு - (சுக்கிரீவன்) ஏவின தொழிலாகிய
சீதையைத் தேடுவதற்கு; ஆயினார் அவரும் - இசைந்தவரான அந்த வானர
வீரரும்; உலகினைத் தகைநெடுந் தானையார்  - உலகத்தையே (தமது
வன்மையால்) எதிர்த்துத் தடுக்கவல்ல பெருஞ்சேனையை உடையவர்களாய்;
அன்ன நாள் அவதியில் - (தம் அரசனான சுக்கிரீவன் குறித்த) அந்த ஒரு
மாதத் தவணைக்குள் (தேடித் தருவதற்காக); தாயினார் - விரைந்து
சென்றார்கள்.

     மேற்கு, வடக்கு, கிழக்கு என்ற திசைகளில் இடபன், சதவலி, விநதன்
என்ற வீரர்களை அனுப்பினான் என்பது.  மூன்றாமடி : முற்றுமோனை.
ஆங்கு: அசை.

     உலகினைத் தகை நெடுந்தானையார்: உலகம் முழுவதும் எதிர்த்துவரினும்
தடுத்துப் போர் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த வானரவீரர்என்பது.     1