4524. அந் நெடுங் குன்றமொடு,
      அவிர் மணிச் சிகரமும்,
பொன் நெடுங் கொடிமுடிப்
      புரைகளும், புடைகளும்,
நல் நெடுந் தாழ்வரை நாடினார், -
      நவை இலார் -
பல் நெடுங் காலம் ஆம்
      என்ன, ஓர் பகலிடை.

     நவை இலார் - குற்றமற்ற அந்த வானர வீரர்கள்; அந்நெடுங்
குன்றமொடு -
உயர்ந்துள்ள அந்த விந்திய மலையினிடத்தில்; அவிர் மணிச்
சிகரமும் -
ஒளிவீசும் இரத்தினங்களையுடைய சிகரங்களையும்; பொன்
நெடுங்கொடு முடிப் புரைகளும் -
அழகான நீண்ட அந்தச் சிகரங்களிலுள்ள
குகைகளையும்; புடைகளும் - பக்கங்களையும்; நல் நெடுந் தாழ்வரை -
அழகிய நீண்ட அடிவாரங்களையும்; ஓர் பகலிடை - ஓரு
பகற்பொழுதுக்குள்ளாக; பல் நெடுங் காலம் ஆம் என்ன - மிகுதியான பல
நாள்கள் தேடிக் காண்பது போன்று; நாடினார் - தேடினார்கள்.

     வானரர்கள் மிகப் பலராயிருந்ததாலும், செய் தொழிலை மிக்க
ஊக்கத்தோடு செய்ததாலும் பலகாலம் செய்யக்கூடிய பணிகளை ஒரு
பகற்பொழுதிலேயே செய்துமுடித்தனர் என்பது.

     குன்றமொடு : வேற்றுமை மயக்கம்.

     புரை : துளை - இங்கே குகையைக் குறித்தது.                    4