4525. | மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறாவகையின், அச் சில் அல் ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார், புல்லினார் உலகினை, பொது இலா வகையினால், எல்லை மா கடல்களே ஆகுமாறு, எய்தினார். |
எல்லை மா கடல்களே - (பூமியைச் சுற்றிலும்) பெரிய எல்லை யாகவுள்ள கடல்களே; ஆகுமாறு எய்தினார் - தமக்கு ஒப்பாகும் என்று சொல்லுமாறு சென்ற அந்த வானரவீரர்கள்; மல்லல் மா ஞாலம் - வளமை மிக்க பெரிய பூமியிலுள்ள உயிர்களுக்கு; ஓர் மறு உறா வகையின் - எவ்விதத் துன்பமும் உண்டாகாத வகையில்; அச்சில் அல் ஓதிஐ - அந்தப் பொன்தகட்டையணிந்த இருண்ட கூந்தலையுடைய சீதையை; இருந்த உறைவிடம் - (அவள்) தங்கியிருந்த இடத்தை; தேடுவார் - தேடுபவர்களாய்; உலகினை - (அவ்விந்திய மலையின்) பூமி முழு வதையும்; பொது இலா வகையினால் - தம்மையல்லாமல் வேறெவர்க்கும் எவ்விதத் தொடர்புமில்லாதபடி; எய்தினார் - சென்று அடைந்தார்கள். வானரர்கள் விந்தியமலையில் எந்த இடமும் விட்டுப்போகாதவாறு தாமே பரவிநின்று முழுவதும் சீதையைத் தேடினார்களென்பது. அம்சில் ஓதி - அஞ்சில் ஓதி என விகாரமாகலாம். சில் : மகளிர் தலையிலணியும் தகட்டணி. சில்அல் ஓதி : அன்மொழித் தொகைப் பன்மொழித்தொடர். உலகு : பரந்த பூமியின் ஒரு பகுதி. ஓதியை என்றதில் பொருந்திய இரண்டாம் வேற்றுமை உருபு பிரித்துக் காட்டப்பட்டது. இருந்த உறைவிடம் என்பது இருந்துறைவிடம் எனச் செய்யுட் சந்தம் நோக்கி அகரம் தொகுத்து இயையும். 5 |