4526.விண்டு போய் இழிவர்; மேல்
      நிமிர்வர்; விண் படர்வர்; வேர்
உண்ட மா மரனின், அம்
      மலையின்வாய், உறையும் நீர்
மண்டு பார்அதனின், வாழ்
      உயிர்கள் அம் மதியினோர்
கண்டிலாதன, அயன்
      கண்டிலாதனகொலம்.

     அம்மதியினோர் - நல்லறிவுடைய அந்த வானரர்கள்; விண்டு போய -
(தனித்தனியே) பிரிந்து சென்று; இழிவர் - (சிலர்) இறங்கிச் செல்வர்; மேல்
நிமிர்வர் -
(சிலர்) மேலேறிச் செல்வர்; விண் படர்வர் - (சிலர்) வானத்தில்
தாவிச் செல்வர்; வேர் உண்ட மா மரனின் - வேர்களால் நீரை உறிஞ்சும்
மரங்களினிடத்தும்; அம்மலையன் வாய் - அந்த மலையினிடத்தும்; உறையும்
நீர் மண்டு -
தங்கிய நீர் நிரம்பப் பெற்ற; பார் அதனின் - பல
இடங்களிடத்தும்; வாழ் உயிர்கள் - வாழுகின்ற உயிர்களில்; கண்டிலாதன -
(அவ் வானர வீரர்களால்) தேடிக் காணப்படாதன இருக்குமானால் (அவை);
அயன் கண்டிலாதன ஆம் -
பிரமனால் படைக்கப் படாதவையேயாகும்.

     மரஞ் செறிந்த இடங்களும் வெற்றிடமும் புனல் நிரம்பிய இடமுமாய்
மூன்று பகுப்பாயுள்ள அந்த விந்தியமலை முழுவதிலும் பிரமனது படைப்பிற்கு
உட்பட்ட எல்லாவுயிர்களையும் வானரர்கள் தேடிப் பார்த்தார்களென்பது.

     பிரமன் படைக்காத பொருள்கள் இல்லை; அதுபோன்று இந்த வானர
வீரர்கள் காணாத உயிர்களோ பொருள்களோ இல்லை.  நீர் மண்டு பார்:
ஓடை, சுனை முதலியன.

     வேறு உரை: விண்டு போய் இழிவ - நிலத்தைத் துளைத்துக் கொண்டு
பூமிக்குள் செல்லும் (பாம்பு முதலிய) ஊர்வனவும்; மேல் நிமிர்வ - நிலத்தில்
வாழும் விலங்கினங்களும்; விண் படர்வ -ஆகாயத்தில் பறக்கும்
பறவைகளுமாய் அம் மலையின் கீழும் மேலும் புடையிலும் உறையும்
உயிர்களில் இவர்கள் கண்ணில் படாதன ஒன்றுமேயில்லை எனவும் உரை
கூறலாம்.                                                    6