நருமதைக் கரையில் வானரர்

கலிவிருத்தம் (வேறுபட்ட சந்தம்)

4527. ஏகினார், யோசனை ஏழொடு ஏழு; பார்
சேகு அறத் தென் திசைக் கடிது செல்கின்றார்,
மேக மாலையினொடும் விரவி, மேதியின்
நாகு சேர் நருமதி யாறு நண்ணினார்.

     பார் சேகு அற - பூமியின் திண்மை சிதையுமாறு; தெண்திசைக் கடிது
செல்கின்றார் -
தென்திசையிலே (சீதையைத் தேட) விரைந்து செல்லுகின்ற
வானர வீரர்கள்; ஏழொடு ஏழு யோசனை ஏகினார் - பதினான்கு
யோசனையளவு சென்று; மேதியின் நாகு சேர் - எருமை இளங் கன்றுகள்
சேர்ந்துள்ள; மேக மாலையினொடும் விரவி - கரிய மேகங்களின்
வரிசைகளோடு கலந்து; நருமதை யாறு - நருமதையென் னும் நதிக் கரையை;
நண்ணினார் -
சென்று அடைந்தார்கள்.

     கடலில் படிந்து மேகங்கள் நீர் பருகமென்று கூறுவது கவி மரபு. நாகு :
எருமைக் கன்று

     அங்குள்ள எருமைக்கன்றுகள் நீருண்ட காளமேகங்களோடு வேறுபாடு
தோன்றாதவாறு நருமதை நீரில் படிகின்றன என்பதாம்.  வானரர்கள்
பெருங்கூட்டமாய் இயங்குவதால் நிலத்தின் தண்மை சிதைந்தது என்பதைப்
'பார் சேகு அற' என்ற தொடர் விளக்கிற்று. சேரன் செங்குட்டுவனின் சேனை
சென்ற போது நீலகிரி மலையின் முதுகு நெளிந்தது என்று சொல்லும்
வருணனையை நினைவு கூர்க. (சிலப். கால்கோள்.82)                  7