4528. | அன்னம் ஆடு இடங்களும், அமரர் நாடியர் துன்னி ஆடும் இடங்களும், துறக்கம் மேயவர் முன்னி ஆடும் இடங்களும், சுரும்பு மூசு தேன் பன்னி ஆடு இடங்களும், பரந்து சுற்றினார். |
அன்னம் ஆடு இடங்களும் - அன்னப் பறவைகள் விளையாடும் இடங்களையும்; அமரர் நாடியர் - தேவ மாதர்களான அரம்பை முதலிய பெண்கள்; துன்னி ஆடு இடங்களும் - வந்து நீராடும் இடங்களையும்; துறக்கம் மேயவர் - சொர்க்கலோகத்திலுள்ள வானவர்; முன்னி ஆடு இடங்களும் - வந்து சஞ்சரிக்கும் இடங்களையும்; சுரும்பு மூசு தேன் - சுரும்புகளும், நறுமண மலர்களில் மொய்க்கும் தேன் என்ற வண்டுகளும்; பன்னி ஆடு இடங்களும் - பாடித் திரிகின்ற இடங்களையும்; பரந்து சுற்றினார் - துழாவித் தேடித் திரிந்தார்கள். நருமதையாற்றின் பெருஞ்சிறப்பாலும், அதனைச் சார்ந்த இடங்களின் மிக்க இனிமையாலும் அங்கே தேவமாதர்களும், தேவர்களும் வரலாயினர் என்பது. சுரும்பு, தேன்: வண்டின் வகைகள். சுரும்பு எனும் வண்டுகள் எல்லாப்பூமணத்திலும் செல்லும் தன்மையன என்றும், தேன் என்னும் வண்டுகள் நறுமண மலரிடத்தே மட்டும் செல்லும் தன்மையன என்றும் கூறுவர். 8 |