4529.பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார்,
அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ்
நிறை நறுந் தாமரை முகமும், நித்தில
முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார்.

     பெறல் அருந் தெரிவையை - பெறுதற்கு அரிய சீதையை; நாடும்
பெற்றியார் -
தேடும் தன்மையுடையவர்களான வானரர்கள்; அறல் நறுங்
கூந்தலும் -
கருமணலாகிய நறுமணமுள்ள அவளது கூந்தலையும்; அளக
வண்டுசூழ் நிறை -
கூந்தல் போலக் கருநிறமுள்ள வண்டுகள் சூழ்ந்து
நிறைந்துள்ள; நறுந்தாமரை முகமும் - தாமரை மலராகிய அவளது
முகத்தையும்; நித்தில முறுவலும் - (அலைகளால் கொழிக்கப்படுகின்ற)
முத்துக்களாகிய அவளுடைய பற்களையும்; காண்பர் - காண்பார்கள்;
முழுதும் காண்கிலார் -
(ஆனால்) சீதையின் உருவ முழுவதையும் ஒருசேரக்
காணாதவரானார்கள்.  ஆல் - அசை.

     சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் நருமதையாற்றின்கரையில்
அச் சீதையின் உருவ முழுவதையும் பார்க்கமுடியாமல் அவளது முகத்திற்கும்
அந்த முகத்திலுள்ள உறுப்புகளுக்கும் ஒப்பான சில பொருள்களை மட்டுமே
கண்டனர்; தாம் தேடிவந்த சீதையின் முழுஉருவத்தையும் நிகர்த்தனவற்றைக்
காணவில்லை. போலிகளிலும் முழுமையானவற்றை - சீதைக்கு முழுமையாக
ஒப்பு கூறத்தக்கனவற்றை வானரர் காணவில்லை.

     நருமதையாற்றில் கருமணல் சீதையின் கூந்தலையும், தாமரை மலர்கள்
முகத்தையும், அதன் கரையில் கிடக்கும் முத்துக்கள் பற்களையும் ஒக்கும்
என்பது.  அளக வண்டுசூழ் தாமரைமுகம் - உவமையை அங்கமாகக் கொண்ட
உருவகம்.  அறற் கூந்தல், நித்தில முறுவல் - உருவகம்.  காண்பரால் முழுதும்
காண்கிலார்: முரண்தொடை.                                      9