4530. | செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர், தரும தயா இவை தழுவும் தன்மையர், பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல் நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார். |
செரு மத யாக்கையர் - போர் புரிவதில் எக்களிப்புக் கொண்ட உடம்பினையுடையவர்களும்; திருக்கு இல் சிந்தையர் - மாறுபாடற்ற மனமுடையவர்களும்; தருமம்தயா இவை தழுவும் தன்மையர் - தரும மும் அருளும் இயல்பாக அமைந்த தன்மையுடையவர்களுமாகிய வானரர்கள்; பொரு மத யானையும் - போர் செய்கின்ற மதங் கொண்ட ஆண்யானைகளும்; பிடியும் - பெண் யானைகளும்; புக்கு உழல் - புகுந்து விளையாடுகின்ற; நருமதை ஆம் எனும் நதியை - நருமதை என்னும் பேர் கொண்ட ஆற்றை; நீங்கினார் - கடந்து சென்றார்கள். யாக்கை : உதிரம் முதலான எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது என்று உடலுக்குக் காரணக்குறி. திருக்கு இல்சிந்தையர்: (குரங்குத் தன்மையால்) மாறாமல் ஒருபடித்தாய மனமுடையவர். ஆம் :அசை. 10 |