4538. இரிந்தன, கரிகளும் யாளி ஈட்டமும்;
விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின;
திரிந்தனர், எங்கணும் திருவைக் காண்கிலார்,
பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என,

     (அவ்வாறு மலைமேல் ஏறிய வானரர்களைக் கண்டு)கரிகளும் -
யானைகளும்; யாளி ஈட்டமும் - யாளிகளின் கூட்டமும்; இரிந்தன - (பயந்து)
விலகியோடின; விரிந்த கோள் அரிகளும் - (அம்மலை மேல்) பரந்திருந்த
கொல்லுமியல்புள்ள சிங்கங்களும்; வெருவி நீங்கின - அஞ்சி நிலைகெட்டு
அகன்றன; (அவ்வானரர்கள்) எங்கணும்திரிந் தனர் - மலை முழுவதும்
தேடிப் பார்த்தவர்களாகி; திருவைக் காண்கிலார் - சீதையைக் காணாதவராகி
(அதனால்); பரிந்தன சிந்தனை - மனம் நொந்தவர்களாய்; பரிகின்றாம் என
-
(இப்பொழுது) மிக வருந்துகின்றோம் என்று (நைந்து).

     அடுத்த பாடலில் 'தேடினார்' என முடியும். கோள் அரி : சிங்கம்;
பிறவற்றின் உயிரைக் கொள்வது.                                    18