சீதையைக் காணாமல் இறங்குதல் 4539. | ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று, உம்பரைத் தொடுவது ஒத்து, உயர்வின் ஓங்கிய, செம் பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார்; கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார். |
(வானரர்கள்) ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று- நூறு காத அளவு அகலமுடையதாய்; உம்பரைத் தொடுவது ஒத்து - வானத்தைத் தீண்டுவது போன்று; உயர்வின் ஓங்கிய - மிகவும் உயர்ந்துள்ள; செம்பொன் நல்கிரியை - செம்பொன் மயமான அழகிய அந்த ஏமகூட மலையில்; ஓர் பகலில் தேடினார் - ஒரு பகல் முழுவதும் தேடிப் பார்த்தனர்; கொம்பினைக் கண்டிலர் - (ஆனால்) பூங்கொம்பு போன்றவர்களாகிய சீதையைக் காணாதவர்களாகி; குப்புற்று ஏகினார் - (அம் மலையிலிருந்து) இறங்கிச் சென்றார்கள். ஏமகூடத்தைப் புகழ்ந்து அதனைச் செம்பொன் நற்கிரியென்றார். கொம்பு : உவமவாகுபெயர். குப்புறுதல் : கீழிறங்குதல். 19 |