வானரர் இருளில் வருந்துதல்

4547.அக் கணத்து, அப்
      பிலத்து அகணி எய்தினார்,
திக்கினொடு உலகு உறச்
      செறிந்த தேங்கு இருள்,
எக்கிய கதிரவற்கு
      அஞ்சி, ஏமுறப்
புக்கதே அனையது ஓர்
      புரை புக்கு எய்தினார்.

     அக்கணத்து - (வானர வீரர்கள்) அப்பொழுது; அப்பிலத்து அகணி
எய்தினார் -
அந்தப் பிலத்தின் உள்ளிடத்தையடைந்தவர்களாய்; திக்கினொடு
உலகு உற -
நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தும்; செறிந்த தேங்கு இருள் -
மிக நெருங்கி நிறைந்த பேரிருள்; எக்கிய கதிரவற்கு அஞ்சி - (வானத்தில்)
ஏறிய சூரியனிடம் அச்சங் கொண்டு; ஏமுறப்புக்கதே அனையது - பாதுகாப்பு
அடையப் புகுந்தது போலத் தோன்றுவதாகிய; ஓர்புரை - ஒரு குகையில்;
புக்கு எய்தினார் -
புகுந்து சென்றார்கள்.

     வானர வீரர் பிலத்துள் புகுகையில் அதனிடையிலே இருள் செறிந்த ஒரு
குகையிலே நுழைந்து செல்லலாயினர் என்பது.

     அங்கு நிறைந்திருந்த இருளை, தனக்குப் பகைவனான கதிரவனுக்கு
அஞ்சிப் பிலத்துள் பதுங்கியிருப்பதாகக் குறித்தது தன்மைத்
தற்குறிப்பேற்றவணியாம்.  எக்கிய - ஏறிய (திசைச் சொல்) அகணி -
உள்ளிடம்; புரை: உள்ளறை; (ஏமமுற): ஏமுறு: தொகுத்தல் விகாரம்.      27