4548. | எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்; வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்; இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள், முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார். * |
(அவர்கள்) எழுகிலர் - (அப்பாலே செல்ல) எழுந்து புறப்படாமலும்; கால் எடுத்து ஏகும் எண்இலர் - அடிவைத்துச் செல்லும் கருத்தில்லாமலும்; வழி உளது ஆம் எனும் - அப்பாலே செல்லுவதற்குரிய வழியுள்ளது என்னும்; உணர்வு மாற்றினார் - உணர்வையும் மாற்றிக் கொண்டவர்களாய்; இழுகிய நெய் எனும் - விழுதாக உறைந்த நெய் போன்ற; இருட் பிழம்பினுள் - இருளின் தொகுதியில்; முழுகிய - மூழ்கி விட்ட; மெய்யர் ஆய் - உடம்பையுடைவர்களாய்; (ஒருவர்க்கொருவர் இருப்பிடம் அறிந்து கொள்ள முடியாமல்); உயிர்ப்பு முட்டினார் - (மனத்துயராலும் அச்சத்தாலும்) பெருமூச்செறிந்தார்கள். வானரவீரர் இருட்பிழம்பினுள் அகப்பட்டுக் கொண்டதால் மேற்கொண்டு செய்யும் செயலில் நாட்டமில்லாது ஒருவரையொருவர் காணமுடியாது திகைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் என்பது. உயிர்ப்பு முட்டுதல் : மூச்சுமுட்டுதல் என்பது வழக்கு. 28 |