வானரர் வேண்டிக் கொண்டபடி, அனுமன் அவர்களைக் கொண்டு செல்லுதல் 4549. | நின்றனர், செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர், 'பொன்றினம் யாம்' எனப் பொருமும் புந்தியர், 'வன் திறல் மாருதி! வல்லையோ எமை இன்று இது காக்க?' என்று, இரந்து கூறினார். |
செய்வது ஓர் நிலைமை - (அனுமனைத் தவிர மற்றைய வானர வீரர்கள்) இன்னது செய்யவேண்டும் என்ற செயலையும்; ஓர்கிலர் நின்றனர் - உணரமாட்டாது நின்றவர்களாய்; பொன்றினம் யாம் என - இறந்துவிட்டோம் நாம் என்று; பொருமும் புந்தியர் - வருந்துகின்ற மனமுடையவர்களுமாகி; வன்திறல் மாருதி - (அனுமனை நோக்கி) மிக்க வலிமையுடைய அனுமானே! இன்று - இப்பொழுது; எமை இது காக்க வல்லையோ - எங்களை இத்துயரத்திலிருந்து காப்பதற்கு வல்ல மையுடையையோ என்று முறையிட்டு; இரந்து கூறினார் - வேண்டிக் கொண்டார்கள். இருள் தொகுதியில் அகப்பட்டுக் கொண்ட அந்த வானரவீரர் தம்மை இறந்து போனவர்களாகவே கருதி வருத்தமுற்று அனுமனை விளித்து, 'இன்று எங்களை இத் துயரத்திலிருந்து காக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டனர் என்பது. புந்தி: எண்ணம். ஓர்கலர்: முற்றெச்சம். அல் - எதிர்மறை இடைநிலை. 29 |