4550. | 'உய்வுறுத்துவென்; மனம் உலையிர்; ஊழின் வால் மெய்யுறப் பற்றுதிர்; விடுகிலீர்' என, ஐயன், அக் கணத்தினில், அகலும் நீள் நெறி கையினில் தடவி, வெங் காலின் ஏகினான். |
உய்வுறுத்துவென் - (மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க (வேண்டியன) செய்வேன்; மனம் உலையிர் - உள்ளம் வருந்த வேண்டா; ஊழின் - முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று); வால் மெய்யுறப் பற்றுதிர் - (எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; விடுகிலீர் என - அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு; அக்கணத்தினில் - (அவ் வானரர்கள் தனது வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே; ஐயன் - சிறந்தவனான அந்த அனுமன்; அகலும் நீள்நெறி - செல்லவேண்டிய அந்தக் குகையின் வழியில்; கையினில் தடவி - கையால் தடவிக் கொண்டு; வெங்காலின் ஏகினான் - வேகத்தையுடைய காலினால் நடந்து முன்னே சென்றான். இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால் முன்னே நடந்து சென்றான் என்பது. காலின் : காற்றுப்போல விரைந்து என்றும் பொருள் கொள்ளலாம். இருளாதலால் அனுமன் தடவிச் சென்றான் என்றார். 30 |