4551. | பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன், மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட, துன் இருள் தொலைந்திட, துரிதத்து ஏகினான் - பொன் நெடுங் கிரி எனப் பொலிந்த தோளினான். |
நெடும் பொன்கிரி என - உயர்ந்த மேருமலைபோல; பொலிந்த தோளினான் - விளங்கும் தோள்களையுடைய அனுமான்; பன்னி ரண்டு யோசனை - பன்னிரண்டு யோசனை தூரம்; படர்ந்த மெய்யினன் - வளர்ந்த உடலையுடையவனாய்; மின் இரண்டு அனைய - (தன் காதுகளில் அணிந்துள்ள) இரண்டு மின்னற்கொடி போன்று; குண்டலங்கள் வில் இட - குண்டலங்கள் ஒளியை வீசுவதால்; துன் இருள் தொலைந்திட - அடர்ந்த இருள் அகன்றொழிய; துரிதத்து ஏகி னான் - விரைவாகச் சென்றான். அனுமன் பேருருவமெடுத்துத் தன் குண்டலங்கள் விட்டுவிட்டு ஒளி வீசுவதால் இடையிடையே இருள் விலகிச் செல்ல, அந்தக் குகையின் உட்புறத்தில் சென்றான் என்பது. அனுமன் நினைத்த உருவம் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவன்; எதிர்ப்பட்டவர்களையும் கொடிய விலங்குகளையும் அச்சுறுத்துவதற்காக அனுமன் இந்தப் பேருருவைக் கொண்டான் என்பது குறிப்பு. 'அனுமன் நிறமும் பொன்னிறம், வடிவும் பெரிது' என்பது கொண்டு மேருமலையை உவமையாக்கினார். 31 |