4555.புவி புகழ் சென்னி, பேர்
      அமலன், தோள் புகழ்
கவிகள்தம் மனை என,
      கனக ராசியும்,
சவியுடைத் தூசும், மென்
      சாந்தும், மாலையும்,
அவிர் இழைக் குப்பையும்,
      அளவு இலாதது;

     புவி புகழ் சென்னி - (மேலும் அந்த நகரம்) உலகத்தவரால் பெரிதும்
புகழப்படுகின்ற குலோத்துங்க சோழனாகிய; பேர் அமலன் தோள் புகழ் -
பெருமையுள்ள குற்றமற்ற அரசனது தோள்வலிமையைப் புகழ்ந்து பாடிய;
கவிகள் தம் மனை என -
கவிஞர்களின் வீடுகள் போல; கனக ராசியும் -
பொற் குவியலும்; சவியுடைத் தூசும் - ஒளி மிக்க பொன்னாடைகளும்; மென்
சாந்தும் -
மென்மையான கலவைச் சந்தனமும்; மாலையும் - மலர்
மாலைகளும்; அவிர் இழைக்குப்பையும் - ஒளிவிட்டு விளங்கும்
அணிகலன்களின் குவியல்களும்; அளவு இலாதது - அளவில்லாதபடி
நிறையப் பெற்றது.

     குலோத்துங்க சோழன் தன்னை நாடி வந்து பாடுகின்ற கவிஞர்களுக்குப்
பொற்குவியல் முதலியன கணக்கின்றிக் கொடுக்கும் வன்மையுடையவன்
என்பதைக் கம்பர் செய்ந்நன்றியுணர்வால் குறித்தார் என்பது சவி: ஒளி. தூசு:
ஆடை. இழை. அணிகலன். இழைத்துச் செய்யப்படுவது - காரணக் குறி.
இங்கே சோழனது பெருமை உவமான முகத்தால் பாராட்டியுரைக்கப்
பெற்றுள்ளது.  தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே நினைந்து
பாராட்டுவது போலச் சோழ மன்னனையும் இங்கே நினைந்து போற்றுகிறார்
கம்பர்.                                                       35