கலிவிருத்தம் (வேறுசந்தம்)

4558. கன்னி நெடு மா நகரம்
      அன்னது எதிர் கண்டார்;
'இந் நகரம் ஆம், இகல்
      இராவணனது ஊர்' என்று,
உன்னி உரையாடினர்;
      உவந்தனர்; வியந்தார்;
பொன்னின் நெடு வாயில்
      அதனூடு நனி புக்கார்.

     அன்னது - (அனுமன் முதலிய வானர வீரர்கள்) அத்தன்மை வாய்ந்த;
கன்னி நெடு மா நகரம் -
என்றும் அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தை;
எதிர் கண்டார் -
கண்ணெதிரே கண்டவர்களாய்; இந்நகர் - இந்த
நகரமானது; இகல் இராவணனது - பகைமையையுடைய இராவணனது;
ஊர்ஆம் என்று உன்னி -
நகரமாகுமென்ற மனத்தில் நினைந்து;
உரையாடினர்- தமக்குள் பேசிக்கொண்டு; உவந்தனர் வியந்தார் -
மகிழ்ச்சியும் வியப்பும்ஒரே சமயத்தில் அடைந்தவர்களாய்; பொன்னின்
நெடுவாயில் அதன் ஊடு-
பொன் மயமான நீண்டு அகன்ற அந்த நகரத்து
வாயிலில்; இனிது புக்கார்- இனிதாக நுழைந்து சென்றார்கள்.

     அந்த நகரத்தை வானர வீரர் கண்டதும் இராவணனது இலங்கையென்று
நினைத்து உடனே சீதையைக் காணலாமென்ற மகிழ்ச்சியோடு உள்ளே
நுழைந்தார்கள் என்பது.  கன்னி: அழிவின்மை. கண்டார், உரையாடினர்,
வியந்தார் -முற்றெச்சங்கள்.                                     38